அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்
ஊடகக்கோட்பாடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊடகக்கோட்பாடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 ஆகஸ்ட், 2018

அரசாங்கத்திற்கும் மக்களிற்குமான உறவுப்பாலமாக விளங்குவது ஊடகங்களே!

             மக்களின் வரியில் செயற்படும் அரச ஊடகங்கள் மற்றவர் மீது சேறு பூசும் விதத்தில் செயற்பட முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அபே கம வளாகத்தில் இன்று (09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
சுயாதீனத் தொலைக்காட்சி, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் என்பன அரச நிறுவனங்கள் ஆகும். இது நடுநிலையாக செயற்பட வேண்டும். ஆனால், அரசாங்கத்துக்கு வால் பிடித்து, மற்றவர்கள் மீது பொய்யான செய்திகளை ஒளிபரப்பி வருவதை அனுமதிக்க முடியாது.
தனியார் ஊடகமொன்றில் யாராவது ஒருவர் மற்றொருவர் மீது சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபடுவதாயின், அதனை எதிர்க்க முடியாது. ஆனால், நாட்டின் வரிப் பணத்தில் இயங்கும் ஒரு ஊடகம் இவ்வாறு செயற்பட முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். குறித்த செய்தியானது இணையதளத்தில் வெளியாகியிருந்தது. இந்த செய்தியின் பின்புலம் தொடர்பாக ஆராய்வதாகவே இந்த பத்தி எழுத்து அமையவிருக்கின்றது.
      ஊடகங்கள் என்பது தகவல்கள் மற்றும் கருத்துகளை பரிமாற்றம் செய்கின்ற சாதனங்களே ஆகும். ஜனநாயகத்தை நிலைநாட்டும் முக்கிய காரணியாக ஊடகங்கள் விளங்குகிறது. எனினும், ஊடகங்கள் பெரும்பாலும் அடக்குமுறையை எதிர்கொள்வதாகவே காணப்படுகிறது. எமது நாட்டை பொறுத்தவரை பாரிய யுத்தமொன்றை எதிர்கொண்ட காரணத்தால் ஊடக சுதந்திரம் பற்றி வாயே திறக்காத சூழ்நிலையே காணப்பட்டது. இதேவேளை யுத்த சூழலில் ஊடகவியலாளர்கள் பலர் கொல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். சில ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு தப்பியோடினர். இவ்வாறான ஊடகவியலாளர்களில் பலர் தமிழர்கள்  என்பது கவனிக்கத்தக்கது. மேலும் லசந்த விக்கிரமதுங்க மற்றும் பிரகீத் எக்னெலி கொட போன்றவர்களிற்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக கேள்வி எழுப்பும் செய்தி ஊடகங்களே காணப்படுகிறதே அன்றி தமிழ் ஊடகவியலாளர் பற்றி ஊடகங்கள் அலட்டிக் கொள்வதில்லை. குறிப்பாக இத்தகைய ஊடகவியலாளர்களிற்கான அச்சுறுத்தல் நிறைந்த காலப்பகுதியாக மகிந்த ராஜபக்சவின் காலமே இருந்தது. நல்லாட்சி அரசாங்கம் என்று கூறப்படுகின்ற அரசாங்கத்தின் காலப்பகுதியில் முன்னைய அரசாங்கத்தோடு ஒப்பிடுகையில் பாரிய ஊடக சுதந்திரத்திற்கான களமுன்டு எனலாம். பொதுவாக அரச ஊடகங்கள்  நடப்பு அரசாங்கத்தின் பிரச்சாரபீரங்கிகளாகவே காணப்படும். காரணம், குறித்த அரச நிறுவனங்களின் தலைவர் குறிப்பிட்ட அரசாங்கத்தினால் நியமிக்கப்படுவார். எனவே, அரச ஊடகங்களினை கட்டுபடுத்தும் அதிகாரம் முழுமையாக அவரிடம் ஒப்படைக்கப்படும். முன்னாள் ஜனாதிபதி குறித்த விடயத்தை அறியாதவர் அல்ல. கடந்த தனது ஆட்சியில் அரச ஊடகங்களினை மிகவும் தனக்கு உடன்பாடுமிக்கதாக பயன்படுத்தியவர்களில் முன்னோடியானவர். போரை வெற்றி பெற்றுக்கொடுத்தவர் மற்றும் சரத்பொன்சேகாவினை ஹிட்லருக்கு ஒப்பிட்டமை போன்றன சில உதாரணங்கள் மேலும் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சுயாதீன தொலைக்காட்சியினை பிரச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டு மஹிந்த ராஜபக்ஷ மீது காணப்படுகிறது. எது எப்படியோ குறித்த கருத்து அரசியல் நோக்கத்தில் வெளியிட்டகருத்தாகவே உட்பொருள் கொள்ள முடிகிறது.
          
           இதேவேளை, அன்மையில் உலக நாடுகள் இடையே ஊடக சுதந்திரம் பற்றி ஆய்வு மேற்கொண்ட எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்ட 180 நாடுகளை உள்ளடக்கிய அட்டவணையில் இலங்கை பத்து இடங்கள் முன்னேற்றமடைந்து 131 இடத்தை பிடித்துள்ளது. இதற்கான முக்கிய காரணமாக தகவல் அறியும் உரிமை சட்டதை அமுல்படுத்தியமையைக் கூறலாம். மேற்கண்ட அட்டவணையில் நோர்வே முதலிடத்தையும் சுவீடன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. தாய்லாந்து 42 வது இடத்திலும் தெற்காசிய நாடான பூட்டான் 84வது இடத்திலும் பட்டியல் படுத்தப்பட்ட அதேவேளை வடகொரியா இறுதி இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. நாட்டின் காவல் நாய்களாக விளங்கும் ஊடகங்கள் எது மக்களிற்கு சரி எது நடுநிலையானது என்பதை அறிந்து வெளியிட வேண்டும். ஒரு சிறந்த அறிவுத்தெளிவு மிக்க சமூகத்தை உருவாக்கும் அதிகாரம் ஊடகங்களிற்கே உண்டு. எனினும் குறித்த ஊடகங்கள் சில அரசியல் சுயலாபங்களிற்காக ஒருபக்க நியாயப்பாடுகளை முன்வைப்பது கவலையான விடயமாகும். அரசாங்கத்திற்கும் மக்களிற்குமான உறவுப்பாலமாக விளங்கும் ஊடகங்கள் நேர்மைத்தன்மையுடன் செயற்படும் போதே ஜனநாயகம் தொடர்பாக சற்றேனும் உரையாட முடியும்.

ஆக்கம்:
இ.தனஞ்சயன்

சனி, 3 மார்ச், 2018

வாழ்வை வடிவமைப்பன ஊடகங்களே!

தற்காலத்தில் நமது வாழ்க்கையினை வடிவமைக்கும் ஒன்றாக ஊடகங்கள் விளங்குகிறது.இவ் ஊடகங்கள்(Media)சமுதாயத்தை பலப்படுத்துவதாக அமைய வேண்டும்.ஊடகங்கள் சமுகங்களில் பல்வேறு வழிகளில் செல்வாக்கு செலுத்துகிறது. எதேனும் ஒரு தகவலை கருத்தை பலரறியச் செய்வதற்கு மிகப்பெரிய அபாரமாக ஊடகங்களே காணப்படுகிறது. காலத்தின் கண்ணாடியாகக் தற்போது ஊடகங்களே திகழ்கிறது.
       ஊடகங்கள் கருத்துக்கள், யோசனைகள், திட்டங்களை பரிமாறிக் கொள்வதற்கான தகவல் பரிமாற்ற கருவியாக ஊடகங்கள் விளங்குகிறது.இதனை ஆங்கிலத்தில் "The media is an important source of information by its news segments, entertainment and allows for exchange of ideas, suggestion and comments "இந்த ஊடகங்களினை பல்வேறு வழிகளில் வகைப்படுத்தினாலும் பிரதானமாக மூன்று வகைகளில் அதாவது; Broadcast media, Print media and Web media என்று வகைப்படுத்துவார்கள்.
        தற்போதைய காலத்தில் இனையங்களின் வரவு தகவலை பல்வேறு வடிவங்களில் பெற்றுக் கொள்ள வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.தனி நபர்கள் தமக்கென தனியான ஊடகங்களினை பேனக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.மேலும், 20ம் நூற்றாண்டில் மனித குலத்துக்கு கிடைத்த வரப்பிரசாதமாக இனையத்தைக் கொள்ளலாம்.
    மனிதனுக்குள்ள தகவல் பசியை(Information hunger) போக்கும் வண்ணம் இனைய ஊடகங்களின் வரவு அமைந்துள்ளது.குறித்த ஊடகங்களில் வரும் தகவல்களை மக்கள் அப்படியே நம்புகின்றனர்.ஊடகங்கள் நடுநிலையானவை என்ற முற்கற்பித எண்ணங்கள் மக்களிடம் உண்டு. எனினும், ஊடகங்கள் அதிகார மட்டத்திற்கு உட்பட்டு தம்மை தவறாக பிரதிநிதித்துவம்(Misrepresentation)செய்யக்கூடியவை.உதாரணமாக,தற்போது சிரியாவில் இடம்பெறும் யுத்தம் கூட அமெரிக்க தன் நலன் சார்ந்த விஷயங்களை உள்ளடக்கியே செய்திகள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுகிறது.இதேபோன்றே,2003 ம் ஆண்டில் ஈராக் மீதான தனது அராஜகத்தை நியாயப்படுத்தியது.அமெரிக்காவின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாக ஊடகங்களினை தனக்குள் வைத்துக் கொள்ளும் ஆற்றலை குறிப்பிடலாம்.
          இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளில் ஊடக சுதந்திரம்என்பது மட்டுப்படுத்தப்பட்டது.அரச அடக்குமுறை மற்றும் ஊடக நிறுவனத்தில் உள்ளே காணப்படும் சு தந்திரமற்ற ஊடகங்களின் நடுநிலையான தன்மையினை சவாலுக்குட்படுத்தியுள்ளது.ஊடகங்கள் தனித்து செய்தியை வழங்குதல் மாத்திரமல்லாது மகிழ்சிபடுத்தல்,விழிப்புணர்வைஏற்படுத்தவும் வேண்டும்.
       உள்ளூர், சர்வதேச, வணிக மற்றும் விளையாட்டு செய்திகள் நாளந்த மனித வாழ்வில் அடிப்படை தேவைகளுள் ஒன்றாகி விட்டது.இவ்வாறான ஊடகங்கள் தனது உள்ளடக்கங்களில் உண்மை,நடுநிலை,பக்கம்சாராமை போன்ற ஊடக விழுமியங்களினை பேனும்போதே நல்ல முன்மாதிரியான சமுதாயத்தை உருவாக்க முடியும்.

ஆக்கம்: இ.தனஞ்சயன்(இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவில் உதவித்தயாரிப்பாளர்)

செவ்வாய், 12 செப்டம்பர், 2017

அரசியல் தொடர்பாடலிற்கு களமாக அமைவது ஊடகங்களே!

முறைசாரா வழி முறையில் அரசியலினை மக்களிற்கு கற்றுக் கொடுப்பனவாக ஊடகங்கள விளங்குகின்றன. முறை சார்  வழிமுறைகளை பின்பற்றி அரசியல் விஞ்ஞானத்தை கற்றுக் கொள்பவர்கள் மிகவும் சிலரே.ஆகையால், அரசியல் கருத்துருவாக்கத்தில் ஊடகங்களின் வகிபங்கு அளப்பரியது.இவை தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ளவும், மாற்றி அமைத்துக் கொள்ளவும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்க வேண்டிய அவசியப்பாடு உள்ளது.அரசியல் இன்றி ஊடகங்கள் இல்லை ஊடகங்கள் இன்றி அரசியல்   இல்லை எனலாம். அரசியல் இன்று சகல துறையிலிலும் ஊடுவியுள்ளது.விளையாட்டு, கல்வி, பொருளாதாரம்,வைத்தியம்,விவசாயம் என்று அரசியல் ஆதிக்கம் செலுத்துகிறது இதனால் ஊடகங்கள் அரசியலினை தவிர்க்க முடியாத நிலை. தற்போது ஊடகங்களின் அரசியல் முக்கியமானதாக காணப்படுகிற அதேவேளை மக்களை மூளைச்சலவை செய்து செயலற்றவர்களாக்கும் செயலைப் அரசியல் பின்புல உதவியுடன் ஊடகங்கள் நிகழ்த்திக் காட்டுகின்றன. இன்றைய ஓவ்வொரு ஊடகங்களின் பின்புலத்தில் மிகப்பெரிய அரசியல் நிகழ்சிநிரல் இருப்பது என்பது உண்மையானது.தம்மை உண்மை,நடுநிலை, துணிவு எனக் கூறிக்கொண்டாலும் அரசியல் ஆதாயத்திற்காகவே ஊடகங்கள் செயற்படுகின்றது என்பதே நியாயமான கருத்து.இந்நிலையில், ஊடகங்கள் மற்றும் அரசியலின் வெற்றி மக்களின் கைகளில் தான் சனநாயக விதிப்படி தங்கியுள்ளது. எனவே,அரசியல் வாதிகள் தமது கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக பல திட்டமிட்ட செயற்பாடுகளினை மேற்கொள்கின்றாகள் இதுவே அரசியல் தொடர்பாடலாகும்.அரசியல் செயற்பாட்டில் கருத்துக்கள் /சிந்தனைகள் ஊடகங்கள், வேட்பாளர்கள், தொண்டர்கள், கட்சிகள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் வாயிலாக கடத்தப்படுவதே அரசியல் தொடர்பாடல்(Political communication)என வரைவிலக்கனப்படுத்தப்படுகின்றது.அரசியல் தொடர்பாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரூஸ்வெல்ட் "அரசியலில் விபத்து என்று எதுவுமே இல்லை யாவும் திட்டமே என பந்தயம் கட்டலாம் "என அரசியல் திட்டமிடலின் அவசியத்தை சிந்திக்க வைக்கிறார்.தொடர்பாடல் என்பது சாதாரணமான வாழ்வியலில் மிக இன்றி அமையாதது. அரசியலில் தொடர்பாடல் இன்றி அரசியல் இல்லை எனலாம்.அரசியல் வாதிகளின் முக்கியமான முதல் இராஜதந்திரமாக பொருத்தமான மிகச்சிறந்த ஊடகங்களினை தெரிவுசெய்வதே ஆகும்.ஊடகங்கள் கோட்பாடு ரீதியாக பார்தால் ஊடக தெரிவு கோட்பாட்டை குறித்த இராஜதந்திர பிரோயகத்திற்கு பயன்படுத்தலாம்.அரசியல் தொடர்பாடலினை மிகவும் திட்டமிட்டு திறம்பட மேற்கொண்டு வருபவராக இந்திய பிரதமர் நரேந்திரமோடியினை குறிப்பிடலாம்.தனது நாட்டு மக்களிற்கு உரையாற்றும் போது, பெரும்பாலும் மம்பாத் என்ற வானொலி நிகழ்ச்சி ஊடாகவே மக்களிடம் தமது திட்ட எண்ணங்களை கொண்டு சேர்க்கின்றார்.அத்துடன், தற்காலத்தில் மிகவும் பிரசித்தமடைந்துள்ள சமூக ஊடகங்களினை தனது பிரச்சார கருவியாவும் பயன்படுத்தி வெற்றி கண்டவர்.குறிப்பாக, அரசியல் வாதிகள் ஊடகங்களில் தமது பலவீனங்களை மறைத்து முகமூடிகளுடன் தோன்றி தம்மை மக்களின் மீட்பர்களாக,தலைவர்களாக,சீர்திருத்த வாதிகளாக,பேச்சாளர்களாக,தேசப்பற்றாளர்களாக,இன ஆதரவாளராக, உன்னதமானவர்களாக மக்களினை நம்ப வைப்பதற்கு அரசியல் வாதிகளிற்கு ஊடகங்களே மிகவும் சிறந்த களமாக அமைகின்றன.ஆதாரமாக,அரசியல் வாதிகள்/அரசியல்வாதியாக இலக்கு வைத்து இருப்பவர்கள் தம்மை தூய்மையானவர்களாக காட்டி கொள்ள வெள்ளை வேட்டி சட்டை அணிந்து மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களில் குறிப்பாக பிரபலமான ஆலயத்திருவிழாக்கள்,எதிர்ப்பு ஆர்பாட்டங்கள்,நினைவு தினங்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள், திறப்புவிழாக்கள்,மரணவீடுகள், திருமண வீடுகள்,விளையாட்டு போட்டிகள் மற்றும் ஒரு நிகழ்வுகளும் இல்லாவிடில், தமக்கு தாமே விழா எடுத்தல் போன்றவற்றின் ஊடாக மேற்கொள்கின்ற தொடர் பாடல் அரசியல் தொடர்பாடலே ஆகும். இதேபோன்று, தமக்கு தாமே புற விளம்பரங்களை வீதியில் தொங்க விடுதல்,பொது கல்வெட்டில் தமது பெயர்களை பொறித்தல் மற்றும் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்றல்,அரசியல் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்றல் போன்றன அரசியல் தொடர்பாடலே ஆகும்.தேர்தல் காலங்களில் அரசியல் தொடர்பாடலே மிக இன்றியமையாதது.தேர்தல் பிரச்சார சமயங்களில், அதிகமான மக்கள் தமக்கு ஆதரவாக உள்ளனர் போன்ற பிரக்ஞையை ஏற்படுத்தல் குறித்த கட்சிக் கொடிகளின் நிறத்தை முக்கியத்துவப்படுத்துகின்றன.ஊடகங்களில் கட்டணம் செலுத்தி தமக்கு தாமே விளம்பரம் செய்தல்,ஆங்காங்கே தாம் படத்திற்காக செய்த சிறிய உதவிகளை ஆவணப்படுத்தி மீள மீள ஊடகங்களில் ஒளிபரப்பு செய்து மக்களின் மூளையினை சலவை செய்தல்.போன்றன அரசியல் தொடர்பாடலிற்கான முக்கிய எடுத்துக்காட்டுகளாகும்.அரசியலில் ஊடகங்களில் அடிக்கடி வருவது கட்டாயமானது.இல்லாவிட்டால், மக்கள் மறந்து விடுவார்கள். இதற்காக, அரசியல்வாதிகள் பல மூலோபாயத் திட்டங்களை மேற்கொள்வார்கள்.அமெரிக்காவில் இறுதியாக இடம்பெற்ற தேர்தலை பொறுத்தவரை சமூக ஊடகங்களின் பங்களிப்பு அளப்பெரியது.அமெரிக்க ஜனாதிபதி ஊடகங்களினை கடுமையாக தேர்தல் காலங்களில் சாடினார். குறிப்பாக, CNN இனை போலி செய்தியை வெளியிட்டு வரும் ஊடகம் என நேரடியாக சாடினார். கடந்த அமெரிக்க தேர்தலில் கிலாரியின் பக்கம் பிரதான ஊடகங்கள்(Mainstream media)சாய்ந்தாலும் ட்ரம்பின் வெற்றி சாதாரணமாக அமைத்ததற்கு சமுக ஊடகங்களே எனலாம்.எனினும்,  ரஷ்யாவின் பங்களிப்பு ட்ரம்பின் வெற்றிக்கு துனைபுரிந்தது என்பதும் மறுப்பதற்கில்லை.இதேவேளை,சர்வதேச அரசியலில் ஊடகங்களின் வலிமை /சர்வதேச உறவை பேனுவதில் அரசியல் தொடர்பாடலை உணர்ந்த சீனா தனது ஆதிக்கத்தை பொருளாதார மட்டத்தில் உயர்தினால் மாத்திரம் போதாது. தொடர்பாடலே மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து C.G.T.N (China global television network ) இனை உலகளாவிய ரீதியில் விரிவாக்கி சீனாவுக்கு சார்பான அரசியல் பொருளாதார விஷயங்களை விவாதித்து நியாயப்படுத்தி வருகிறது. சீனாவின் one road one belt திட்டத்தின் வெற்றியில் குறித்த தொலைக்காட்சியின் பங்கு அளப்பெரியது.அத்துடன் பூகோள அரசியலினையும் குறித்த ஊடகம் விளங்கிக் கொண்டு செய்தியுடன் உலக வரை படத்தின் சீனாவின் கேந்திர நிலையை சுட்டிக்காட்டுகிறது. குறித்த ஊடகமொழியாக ஆங்கிலமே காணப்படுகிறது.இதேபோல்,  Aljazeera கட்டாரை தளமாகக் கொண்டு அமெரிக்கமயமாதலுக்கு எதிராக இயங்கி வருகிறது. இதன்காரணமாகவே,அண்மையில் பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை கட்டாருக்கு ஏற்பட்டதற்கு மறைமுக காரணம் குறித்த ஊடகமே என்பது நன்றாக நுணுகி சர்வதேச அரசியலை விளங்கிக் கொள்ளும் போது புரியும்.இதேபோல்,Russia Today மற்றும் Tass போன்றன ரஸ்யா சார்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. B.B.C,CNN,APA,AFP போன்றன அமெரிக்காவின் செயல்பாடுகளை நியாயப்படுத்தும் ஊடகங்களே!சர்வதேச ஊடகங்களின் விம்பிள்டன் கட்டமைப்பு பரந்தது/அளவீட்டிற்கு அப்பாற்பட்டது. பிரசித்தமான ஊடக பண்பாட்டை(Popular media culture )உருவாக்குவதில் இவற்றின் பங்கு கணிசமானது.இலங்கையில் அரச ஊடகங்கள் நடப்பு அரசாங்கத்தின் ஊதுகுழலாக அரசியல் தொடர்பாடலை மேற்கொள்கின்ற அதேவேளையில், தனியார் ஊடகங்கள் தமது தனிப்பட்ட இலாப அரசியலிற்காவே குறித்த தொடர்பாடலை முன்னெடுத்துச் செல்கின்றன.தமிழகத்தில் அரசியல் தொடர்பாடல் தொலைக்காட்சி ஊடகவே தற்போது பிரபலமடைந்து வருகிறது. இங்கு, சினிமாவின் தாக்கம் அளப்பெரியது.சினிமாவில் இருந்து அரசியலிற்கு வந்து மிகப் பெரிய வெற்றி பெற்றவராக மக்கள் திலகம் என்று கூறப்படும் MGR இறை குறிப்பிடலாம்.பாத்திரம்,பாடல்கள், திரைக்கதை,வசனங்கள் என அனைத்துமே அரசியல் தொடர்பாடலிற்கான ஆதாரங்கள். தற்போதைய கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தொடர்பான உரையாடல்களும் அரசியல் தொடர்பாடலிற்கான சான்றே ஆகும்.விஜய் கூட எதிர்கால அரசியல் பிரவேசத்திற்கான தொடர்பாடலாகவே சினிமாவினை பயன்படுத்தி வருகிறார். அழகியதமிழ்மகன்,தலைவா,கத்தி தற்போதைய பாடல் ஆளப்போறான் தமிழன் முதல் என்நெஞ்சில் குடி இருக்கும் வரைக்கும் அரசியல் தொடர்பாடலே!குறிப்பாக அரசியல் தொடர்பாக வில் பின்பற்றும் இராஜதந்திரம் தொடர்பாக கவனிக்க வேண்டியது அவசியமாகும்.பார்வையாளர்களின் இடம், காலம்,மொழி போன்றவை புரிந்து கொள்ளப்படவேண்டும். இதன்காரணமாகவே,நமது நாட்டின் அரசியல்வாதிகள் தெற்கில் ஒருவிதமாகவும் வடக்கில் ஒருவிதமான கருத்தையும் விதைத்து வருகிறார்கள்.இதேவேளை,முன்னாள் ஜனாதிபதி அரசியல் தொடர்பாடலை யுத்தத்தை தானே வெற்றி கொண்டதாகவும்,சிறு குழந்தைகள் மீது பாசம் மிக்கவராகவும்,எளிமையான விவசாயி போன்றும்,தமிழ் கற்றுக் கொள்ளும் ஆசையுள்ளது போன்றும் இதன்காரணமாகவே 'நீங்கள் என்னை நம்பலாம் நான் உங்களை நம்புகிறேன் "போன்ற முறையைக் கையாண்டு வந்தார்.மேலும், இவ்வாறான உடைகளை அணிதல்,எப்படி போட்டோ விற்கு போஸ் கொடுத்தல்,உணர்வுகளை எப்படி முகாமை செய்தல்,நேர்காணலிற்கு எப்படி முகம் கொடுத்தல்,பிரபலமானவர்களை வளைத்துப் போடுதல் போன்றன அரசியல் தொடர்பாடலை மேலும் வலுப்படுத்தும்.என்ன தகவலை ஏன் எப்படி எப்போது எங்கே சொல்கின்றோம் என்பதை பொறுத்தே அரசியல் தொடர் பாடல் வெற்றி அமையும்.எவ்வாறாயினும்,அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கூறியதைப் போன்று "சிலரை பல காலம் ஏமாற்றலாம், பலரை சில காலம் ஏமாற்றலாம், ஆனால், எல்லாரையும் எல்லாவேளையிலும் எங்கேயும் ஏமாற்ற முடியாது "என்ற சிந்தனை அரசியல் தொடர்பாடலிற்கும் சாலப் பொருத்தமானது.அரசியல், சமூக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களிற்கேற்ப தம்மை தகவமைப்பவர்களே அரசியல் தொடர்பாடலில்  வெற்றிபெறுவார்கள்.இ.தனஞ்சயன் யாழ்ப்பாணப்பல்கலைகழகம்,ஊடகக்கற்கைகள்.