அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்
வானொலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வானொலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

சமாதான உருவாக்கத்தில் ஊடகங்களின் வகிபாகம்!

           
           சமூகத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களை வெளிக்கொண்டுவருவதற்கு துணிவற்ற  செய்தி ஊடகம் இருக்கும் வரை, சமாதானம்,நல்லிணக்கம்  மற்றும் இன ஒற்றுமை தொடர்பாக உரையாடுவது சற்று கடினமானதே. பொதுவாக,  ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்ற போது, பெரும்பாலும் பரபரப்பான  மற்றும் சந்தைவாய்புக்களுகேற்பவே, செய்திகளை வெளியிடுகின்றது. 

            யுத்தத்திற்கு பின்னர்  அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் எமது அரசாங்கம் பாரிய அளவில் முயற்சித்தாலும் இன்றளவிலும் அதன் முயற்சி தோல்வியே. காரணம், சமாதானம் மற்றும் நல்லிணக்க கருத்துக்களினை மக்களிடம் கொண்டு சேர்கும்  ஊடகத்தின் பங்கு திருப்திகரமாக இல்லை. ஊடகங்கள் பிரபலமடைய வேண்டுமானால் இனவாதத்தை தமக்கு சாதகமாக்கவேண்டும்,நாட்டின் அபிவிருத்திக்கு அமைதி மற்றும் நல்லினக்கம் அவசியம்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக,எமது நாட்டில்  ஊடகங்கள் அதை நாசப்படுத்துகின்றன. 

                இன்றைய தினம் மின்னணு ஊடகங்கள் மற்றும் ஏனைய  ஊடகங்கள்  மூலமும்  தகவல்கள் விரைவில் பரவலடைகின்றது. எகிப்து மற்றும் துன்சீனிய புரட்சிகள், இந்தியாவின் அண்ணா ஹசாரேவின் போராட்டங்கள்  பொதுவாக, இவற்றை  கட்டுப்படுத்த முடியாதவை. இவற்றின் முலமாக சில சமயங்களில் தேசியப் பிரச்சினைகள் சில தனிநபர்களின் விருப்பங்கள் மற்றும் தமது சுயலாப அரசியல் நிகழ்ச்சி நிரல் அடிப்படையில்தீர்மானிக்கப்படுகின்றது. உதாரணமாக, அண்மையில் நடைபெற்ற கண்டி இடம்பெற்ற இனவெறி தாக்குதல்களை குறிப்பிடலாம். 
           
                 இணையத்தின்   விரைவான பரவல் மற்றும் அர்ப்பணிப்பு சமூக வலைத்தளங்களின் தளங்களின் எழுச்சி ஆகியவை சமூக இணைப்புகளின் உள்கட்டமைப்பை  வியத்தகு முறையில் மாற்றியுள்ளது. இன்றைய தினம் எந்த  செய்தியாக இருந்தாலும்  விரைவாக  பரப்பப்படகூடிய திறன் கொண்டது, அதன் தொலைநோக்கு விளைவுகளைத் தெரிந்துகொள்ளாமல் பொதுமக்களின் ஆர்வம் மற்றும் சமூக மதிப்புகள் என்பவற்றை பொருட்படுத்தாமல் சில சமயங்களில் ஊடகங்கள் செயற்படுகிறது.

                நாட்டில் சமூக நல்லிணக்கத்தை உருவாக்கி ஊக்குவிப்பதில் ஊடகங்கள் ஒரு முக்கிய பங்கை செய்ய வேண்டும் என்று ஒரு குரலில் சமூக அக்கறையாளர்கள் வாதிட்டாலும் தேசியவாதத்தின் பெயரில் உள்ள சிக்கல்களின் சிந்தனையை மதிப்பிடுவதற்கு சில ஊடக செய்தித் தளங்கள் மற்றும் செய்தித்தாள்களின் செயற்பாடுகள் பற்றி  தவறாக விமர்சிக்க வேண்டியுள்ளது. செய்தி ஊடகத்தில் சுய கட்டுப்பாடு மற்றும் வெளியில் இருந்து எந்த அழுத்தமும் சுமத்தப்படக்கூடாது என்று ஊடக ஒழுக்கவியலை  ஒப்புக் கொண்டாலும், ஊடகங்களினுள் அதன் சமூக கடமைகளையும் பொறுப்புக்களையும் கவனித்துக் கொள்கின்றதா என்பது சற்று கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும். 
         
            நாட்டின் தற்போதைய நிலையில், சமாதான மற்றும் இன நல்லிணக்கத்தை பராமரிப்பதற்காக ஊடகங்கள் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்க வேண்டிய கடப்பாடு  உள்ளது. ஆனால் ஊடகங்களின் ஒரு பகுதியினர் தங்களது கொள்கைகளிலிருந்து தவறாக வழிநடத்தப்பட்டு வருகிறார்கள். தொடர்ந்தும் முரண்பாடு இதழியல் அம்சங்களையே பயன்படுத்தி வருகின்றனர் எனினும் சமாதான இதழியல் பண்புகள் இன்னும் எமது நாட்டு ஊடகத்துறையில் பயன்படுத்தப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

இ.தனஞ்சயன் 
                  

சனி, 8 செப்டம்பர், 2018

மனக் கவலை தீர்த்தருளி, தான் நினைத்த எல்லாம் தரும் நல்லூரானின் தேர் பவனி .......

"அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்! வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! – நெஞ்சில் ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்! முருகா என்று ஓதுவார் முன்" வரலாற்றுப் பிரசித்தி பெற்ற அலங்கார கந்தன் என்று வர்ணிக்கப்படுகின்ற யாழ்ப்பாண நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழாவின் தேர் உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ இன்றைய தினம் 08/09/2018 அதிகாலை 7.30 அளவில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில், நாட்டின் சகல பகுதிகளிலும் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் அடியார்கள் வருகைதந்ததுடன் தேர்த்திருவிழா சம்பிரதாயப் பூர்வமாக இடம்பெற்றது. இதன்படி, நல்லூரில் ஊடக நிறுவனங்கள்,வியாபார நிறுவனங்கள் என நல்லூரை மையப்படுத்தி நிறுவன மேம்படுத்தல் செயற்பாடுகளும் இடம்பெற்றன. இந்நிலையில், யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய அடையாளமாக விளங்குகின்ற வரலாற்று சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழாவின் தேர்த்திருவிழா வழமைபோன்று சிறப்பாக இடம்பெற்றதுடன் இம்முறை ஆலயத்திற்கு பொற்கூரை இடப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். 'என்னே விதியின் பயன் இங்கு இதுவோ. . . . பொன்னே மணியே பொருளே அருளே...... மன்னே மயிலேறியவனே. .....' கந்தனுபூதி இ.தனஞ்சயன்

சனி, 25 ஆகஸ்ட், 2018

2019 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடருக்கான இலங்கை அணியின் தயார்நிலை!

இலங்கை கிரிக்கெட் அணியின் மீது இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர்களே நம்பிக்கை வைப்பதற்கு தயக்கமடைகின்ற தருணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியானது தென்னாப்பிரிக்காவுடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடரை முழுமையாக வெள்ளையடிப்பு செய்ததுடன் ஒரு நாள் தொடரில் 3 க்கு 2 என்று தொடரை இழந்து இறுதியாக இடம்பெற்ற ஒற்றை இருபது இருபது தொடரை தனதாக்கியது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் சபையினருக்கு இது சில சமயங்களில் திருப்தி மற்றும் சந்தோசங்களை வழங்கியிருந்தாலும் குறித்த முன்னேற்றங்களை தக்கவைக்க இலங்கை கிரிக்கெட் சபை முயற்சிக்குமா என்பது சிந்தனைக்குரியது. காரணம், இலங்கை கிரிக்கெட் சபைக்குள் இடம்பெறும் கசப்பான சம்பவங்களே இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கான காரணமாகும். இதேவேளை, விளையாட்டு துறை சட்டத்தின் மூலமாக அந்த துறை சார்ந்தஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் எல்லையற்ற அதிகாரங்களை குறைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அக்குழுவை விளையாட்டுத்துறை அமைச்சரான பைஸர் முஸ்தபாவே நியமிக்கப்போவதாகவும் கடந்த வாரம் செய்தியொன்று வெளிவந்து இருந்தது. குறித்த சட்டம், இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெறும் அழுத்தத்தை குறைக்க போதுமான சட்ட எல்லைகளை கொண்டுள்ளதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில், இலங்கை கிரிக்கெட்டிலும் அமைச்சர்களின் செல்வாக்கு அதிகம் காணப்படுகிறது. இதற்கு அண்மைய உதாரணமாக, முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கவிற்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், தரவரிசையில் தென் ஆப்பிரிக்க அணி இலங்கை அணியை விட முன்னிலையில் இருந்தாலும், இலங்கை அனி தமது சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து இந்த டெஸ்ட் போட்டியினை வெற்றி பெற்றது. எனினும், இதே அணியை கொண்டு ஏன் மேற் இந்திய மன்னில் வெற்றி பெற முடியவில்லை. அத்துடன் போட்டி விதிகளை மீறியதாக இலங்கை அணி மீது குற்றச்சாட்டு பின்னர் நிரூபித்து அணியின் தலைவர் மற்றும் பயிற்றுவிற்பாளர்களுக்கு போட்டித்தடை. இலங்கை அணியுடன் விளையாடிய மேற்கிந்திய அணி முதற்தரமான அணியும் அல்ல. கோல்டர் தலைமையிலான இரண்டாம் தர அணியே. ஆகவே, இலங்கை அணி வெளிநாட்டு மண்ணில் கடந்த பல ஆண்டுகளாக தடுமாறியே வருகிறது. இலங்கை அனி இன்னமும் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் எந்த டெஸ்ட் தொடரையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, 1996 இல் இலங்கை இந்திய உபகண்டத்திலேயே உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது. எனினும், 1999 இல் இங்கிலாந்தில் நடந்த உலகக்கிண்ணத்தை கைப்பற்ற முடியவில்லை இரண்டாவது சுற்றுக்குகூட தகுதிபெறமுடியவில்லை. 1996 ல் விளையாடிய 6 வீரர்கள் குறித்த உலகக்கிண்ண போட்டியில் விளையாடி இருந்தனர். அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள உலக கின்ன போட்டியானது இங்கிலாந்தில் இடம்பெறுகின்ற சமயம் இலங்கை கிரிக்கெட் சபையினாது பொறுபற்று செயற்படுமாயின் 1999 நடந்த சம்பவமே மீள இடம்பெறும். இந்நிலையில் தற்போது இலங்கையில் நடாத்தப்ட்டுவரும் உள்ளூர் இருபது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடர் குறித்தும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் மகேல குற்றம்சாட்டியுள்ளார். 84 வீரர்களில் 44 வீரர்கள் மாத்திரமே வாய்ப்பை பெறும் அதேசமயம் ஏனைய 40 வீரர்கள் வெறும் பார்வையாளராகவே இருக்க வேண்டிய நிலை. இவ்வாறான நிலையில் இலங்கை அணியின் அடுத்து வரும் ஆசிய கிண்ன, இங்கிலாந்து,தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான தொடர்கள் உலககிண்ன போட்டிகளிற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணிக்கு இருக்கும் போட்டிகள் ஆகும். குறித்த போட்டிகளினை கடந்து எவ்வாறு 2019 உலக கின்ன போட்டிகளில் பங்கு பற்றி மீண்டும் ஒரு உலககிண்னத்தை இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெற்று கொடுக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இ.தனஞ்சயன்

சனி, 18 ஆகஸ்ட், 2018

ஊடகங்களின் எல்லையை விரிவடையச் செய்யும் உலகமயமாக்கல்!

இன்றைய சமுகத்தை கட்டுமானம் செய்வதில் ஊடகங்களின் பங்கு அளப்பரியது. ஒவ்வொரு மனிதனின் நாளாந்த வாழ்கையின் முக்கிய பகுதியாக ஊடகங்கள் காணப்படுகிறது. ஒரு விடயம் பற்றிய கருத்துகளினை உருவாக்கும் பங்கினை ஊடகங்கள் வழங்கும் தகவல்கள் அடிப்படையாகக் கொண்டே காணப்படுகிறது. அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் முக்கியமான தொடர்பாடல் கருவியாக ஊடகங்கள் விளங்குகிறது. ஊடகங்களின் பிரதான பணியாகக் காணப்படுவது உலகிற்கு எந்த ஒரு தகவலினதும் சரியான விடயம் எது? பிழையான விடயம் எது? என்பதேயாகும். சரியான நேரத்தில் சரியான விடயத்தை சரியான முறையில் கொண்டு சேர்கும் பாரிய பொறுப்பு ஊடகத்திற்குண்டு. ஊடகங்கள் எங்களைச் சுற்றிய அனைத்தையும் முன்னிலைப்படுத்துகின்றது. உதாரணமாக, இணையம், தொலைக்காட்சி, வானொலி,சஞ்சிகை மற்றும் பத்திரிகை போன்றவற்றை குறிப்பிடலாம். குறித்த ஊடகங்கள் வாயிலாக வரும் தகவல்கள்/செய்திகள் அடிமட்ட மக்களினை சென்றடையும் போதே ஊடகங்கள் வெற்றி அடைகின்றன. சமுக பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் தொடர்பில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்கள் தொடர்புகொண்டுள்ளனர். இவ்வாறான விடயங்களை ஊடகங்கள் வாயிலாகவே வெளிக்கொணரமுடியும். இதன்காரணமாக, மக்கள் ஊடகங்களில் தங்கியுள்ளனர். ஊடகங்கள் மக்களில் தங்கியுள்ளது. தற்போதைய நிலையில், ஊடகங்களினை மக்கள் தவிர்க்க முடியாது. மக்களிற்கு தகவல்களினை வழங்கி அவர்களிற்கு பல்வேறு செய்திகள், நிகழ்வுகள், சமூக நடவடிக்கைகள், வாழ்க்கை முறைமை, பொழுது போக்கு மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றை தெளிவுபடுத்துவதாக ஊடகங்கள் காணப்படுகிறது. இலங்கையில் இருந்துகொண்டே, உலகின் எப்பகுதியானாலும் கனடாவோ,ஜேர்மனியோ , தென் கொரியாவோ, அவுஸ்திரேலியாவோ நடைபெறும் நிகழ்வுகளை நேரடியாக கண்டு கொள்ள முடிகிறது. அண்மையில் ரஷ்யாவில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியினை உதாரணமாக குறிப்பிடமுடியும். ஊடகங்கள் சமுகம் மற்றும் அவற்றின் கலாச்சாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனினும் உலகமயமாக்கலின் விளைவினால், ஊடகங்கள் பாரிய செல்வாக்கினை பெற்றுள்ளதுடன் மக்களிற்கு பல சாதக பாதக விடயங்களும் காணப்படுகிறது. பல்வேறு வகையான சமூகங்களின் ககலாச்சாரங்களை ஊடகங்கள் வேறு சமூகத்திற்கு சொல்லி கொடுக்க வழிஏற்படுகின்றது. உதாரணமாக, வட இந்திய நாடகங்கள் தமிழிற்கு டப்பிங் செய்தல் மற்றும் தென் இந்திய திரைப்படங்களின் அதீத தாக்கத்தை இலங்கை தமிழ் சமூகத்தை குறிப்பிடலாம். இதன்காரணமாக, ஊடகங்களினை மக்கள் சாட்சியாக பார்கின்றனர். ஊடகங்களே உலக நிகழ்வுகள் தொடர்பாக அறிவூட்டலை வழங்குகிறது. இத்தகைய ஊடகங்கள் அரசியலில் முக்கிய பிரச்சார ஊடக கருவியாகப் பயன்படுத்துகின்றது. நாட்டின் தலைவர்களினை மக்கள் தெரிவுசெய்வதற்கு மக்களினை குறித்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான காரணங்களினை நியாயப்படுத்தும் கருவியாக ஊடகங்களே காணப்படுகிறது. ஊடகங்களினை பொறுத்தவரை சாதக பாதக அம்சங்கள் காணப்பட்டாலும் மக்களின் சுபாவம் மற்றும் மனநிலையிலேயே அதன் சாதக பாதகங்களை தீர்மானிக்க முடியும். ஊடகங்களின் தாக்கத்தை சரியான முறையில் புரிந்து கொள்ளும் போது, அதனை எமக்கு சாதகமான முறையில் சூழலினை உருவாக்க முடியும். ஊடகங்களின் செல்வாக்கு காரணமாக, தனிநபர்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளில் மாற்றங்களை உண்டாக்க முடியும். உலகமயமாக்கல் காரணமாக, இன்று எமது சாதாரண கருத்துக்கள் கூட இலகுவாக உலகின் எந்த பாகத்தில் இருந்தாலும் எடுத்துச் செல்லப்படுகின்றது.
ஆக்கம்: இ.தனஞ்சயன்