அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்
Media லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Media லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

ஊடக சுதந்திர சுட்டெண் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்!

சர்வதேச ஊடக சுதந்திரம் தொடர்பான சுட்டெண்ணுக்கு அமைய 2017 ஆம் ஆண்டிலும் பார்க்க 2018 ஆம் ஆண்டில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.

ஊடக சுதந்திர சுட்டெண் என்பது ஒரு நாட்டில் ஊடகங்கள் எந்த அளவுக்கு சுதந்திரமாக இயங்குகின்றது என்பது பற்றிய ஒரு அளவீடு ஆகும்.

இது உலகெங்கும் இயங்கும் 14 அமைப்புகள், 130  ஊடகவியாளர்கள், ஊடக ஆய்வாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்தாகும்.

இந்த மதிப்பீட்டை எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு  வெளியிடுகிறது. இந்த அறிக்கையில் மிகச் சிறிய நாடுகள் தவிர்த்து 180 நாடுகளிலுள்ள ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் சுயாதீனத் தன்மை பற்றி ஆழ்ந்த ஆய்வினை மேற்கொண்டு பட்டியல் தயாரிக்கப்படுகின்றது.

மிகச் சிறந்த ஊடக சுதந்திரம் நிலவும்  நாடுகளாக இம்முறை (2019) நோர்வே, பின்லாந்து, சுவீடன், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் போன்ற நாடுகள் இடம்பெறுகின்றன. மிகவும் மேசமான நாடுகளாக ஈரான், வட கொரியா, சீனா, எதிர்ரேரியா, துர்க்மெனிஸ்தான்  ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன.

2017 ஆம் இலங்கை இந்த சுட்டெண் பட்டியலில் 141 வது இடத்தில் இடம் பெற்றிருந்தது. எனினும் 2018 இல் இலங்கை  131 இடத்தில் இடத்திற்கு முன்னேற்றம்  பெற்றதோடு இம் முறை 5 இடங்கள் முன்னேற்றமடைந்து 126 ம் இடத்திற்கு முன்னோக்கி இடம்பெற்றமை  விசேட அம்சமாகும்.

இந்த பட்டியலில் முதலாவது இடத்தில் நோர்வேயும் இரண்டாம் இடத்தில் பின்லாந்தும் இடம் பெற்றுள்ளது.

அந்தந்த நாடுகளில் நிலவும் ஊடக சுதந்திரநிலைமைக்கு அமைய நாடுகள் வெள்ளை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, கறுப்பு என்ற 5 பிரிவுகளில் உள்ளடக்கப்படுகின்றன.

சிறந்த ஊடக சுதந்திரம் உள்ள நாடுகள் வெள்ளை நிற வலையத்திற்கு உள்ளவாக்கப்படுகின்து. இதில் 8% மான நாடுகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊடக சுதந்திரம் ஓரளவுக்கு சிறப்பாகவுள்ள நாடுகள் மஞ்சள் நிற வலையத்திற்குள் உள்ளவாக்கப்படுகின்து. இம்முறை இந்த பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட 16% மான   நாடுகள் இந்த வலையத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

செம்மஞ்சள் நிறத்திற்குட்பட்ட வலையத்தில் இடம் பெற்ற நாடுகளில் ஊடக சுதந்திரம் தொடர்பான பிரச்சனை நிலவுகின்றதாகும். இதில் ஜப்பான், பிறேசில், இஸ்ரேல், பூட்டான், நேபாளம் உள்ளிட்ட 37% மான நாடுகள் இடம் பெற்றுள்ளன.

சிவப்பு வலையத்திற்குட்பட்ட நாடுகள் என்பது ஊடக சுதந்திரம் மிக சிறப்பாக இல்லை என்பதாகும். ரஷ்யா, இந்தியா, மாலைத்தீவு உள்ளிட்ட 29% மான நாடுகள்  இடம் பெற்றுள்ளன.

ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக காணப்படும் நாடுகள் கறுப்பு வலையத்திற்குட்பட்டதாகும். ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக காணப்படும் நாடுகளில் வடகொரியா மற்றும் துர்க்மெனிஸ்தான் போன்ற 11% மான நாடுகள்  இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எல்லையற்ற ஊடகவியலாளர்கள் என்ற சர்வதேச அமைப்பினால் இந்த சுட்டெண் தயாரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்கா 48 ஆவது இடத்திலும் அரசியல் குழப்பம் காணப்படும் வெனிசுலா 148 ஆவது இடத்தில் உள்ளது. அமெரிக்க இந்த பட்டியலை நிராகரித்துள்ளமையும் கவனிக்க வேண்டிய விடயமாகும். தேர்தல் மற்றும் இந்து தத்துவ வாதத்தை கக்கி வரும் இந்தியா 40 ஆவது இடத்திலுள்ளது.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்காலத்தில்  ஊடகங்களுக்கு ஓரளவு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது எனலாம். வழங்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரத்தைப் பயன்படுத்தி மீண்டும் இந்த நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்க கூடாது.ஊடக ஒடுக்குமுறை குறைப்பட்டுள்ளதோடு வெள்ளை வான் கலாசாரம், ஊடகவியலாளர் படுகொலை மற்றும் காணாமல் போதலுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது .

எமது நாட்டு ஊடகத்துறையினை பொறுத்தவரை, ஊடகசுதந்திரம் என்பது அந்த சுதந்திரத்தை மீறும் வகையில் தான் தற்போது பெரும்பாலும் பாவிக்கப்படுகின்றது. இது ஊடக சுதந்திரத்திற்கு ஒரு ஆரோக்கியமான நிலைமை அல்ல.

 இனவாத சாயத்தை பூசும் ஊடகங்களே காணப்படுகிறது. தமது விற்பனை செய்தி பண்டமாக இனத்துவேச செய்திகளே ஊடகங்களினால் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த நிலைமை  இந்நாட்டை மீண்டும் இருண்ட யுகத்திற்குள் தள்ளி விட ஊடகங்கள் விரும்புகின்றனவா என்று கூட மக்கள் கேட்கும் அளவுக்கு நிலைமை காணப்படுகின்றது.

ஊடகங்கள் எப்போதும் பொறுப்புணர்வுடன் செயற்படத் தவறக் கூடாது. இவ்விடயத்தைக் கருத்தில் கொள்ளாது செயற்படும் பட்சத்தில் மீண்டும் ஜனநாயகம், ஊடக சுதந்திரம் குறித்து கண்ணீர் சிந்தும் நிலைமைக்கு உள்ளாக நேரிடும். அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டிராமல் செயற்பட வேண்டியது சகல ஊடகங்களதும் முன்பாக இருக்கும் தலையாய பொறுப்பும் கடமையுமாகும்.

ஆக்கம்
இ.தனஞ்சயன் 

சனி, 1 செப்டம்பர், 2018

ஊடகங்களின் நெறிமுறை சார்ந்த வரம்பு எல்லைகளை புரிந்து கொள்வது அவசியம்!

ஹார்வர்ட் பல்கலைகழக மாணவரான மார்க் சூபேர்க் 2004ம் ஆண்டு பல்கலைக்கழக நண்பர்களிற்கு இடையில் தொடர்புகளை பேனுவதற்காக ஆரம்பிக்கப்பட்டது இன்று தொடர்பாடல் மற்றும் ஊடகத்துறையில் தவிர்க்க முடியாத ஒன்றாக விளங்குகிறது. இது உலகையே மிகவும் இலகுவான சமூக தொடர்பாடல் மிக்க இடமாக மாற்றியமைத்துள்ளது. இன்று , உலகளாவிய ரீதியாக எங்கும் நடைபெறு‌ம் நிகழ்வை நாம் நேரடியாக பார்வையிட முடியும்.
    இந்த நிலையில் அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூகுள்,Twitter மற்றும் Facebook மீது எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது, குறித்த ஊடகங்கள் Conservative media களினை Google நிறுவனம் முடக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த கருத்தை கூகுள் நிறுவனம் அடியோடு மறுத்துள்ளது. இதேவேளை, தாம் எந்த அரசியல் நிகழ்ச்சி நிரலில் அடிப்படையில் இயங்குவதில்லை என்று குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ட்ரம்ப் அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சனின் வோட்டகேட் ஊழலை புலனாய்வு இதழியல் நுட்பத்தை பயன்படுத்தி வெளிக்கொணர்ந்த ஊடகவியலாளரினையும் கடுமையாக சாடினார்.
     இவ்வாறாக கடந்த வாரம் ஊடகங்கள் மீது சீறிப்பாய்ந்து இருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி. ட்ரம்ப் ஊடகங்கள் மீது இவ்வாறான விமர்சனங்களை முன்வைப்பது இது முதன்முறை அல்ல. அமெரிக்க அதிபர் தேர்தல் காலங்களில் கூட CNN இனை போலி ஊடகம் என்று விமர்சித்திருந்தார். மக்களின் எதிரியாக(Enemies of people) ஊடகங்களினை ட்ரம்ப் பார்க்கிறார். இது பிரதான ஊடகங்களிற்கு ட்ரம்ப் மீது எதிர்மறையான சிந்தனையை தோற்றுவித்துள்ளது. 
    ஜனநாயகத்தை நிலைநாட்டும் முக்கிய காரணியாக ஊடகங்கள் காணப்படுகிறது. ஜனநாயகத்துக்கு விளக்கம் கெடுக்கும் அமெரிக்காவில் கூட ஊடகங்கள் பக்கசார்பு என்பது சிந்தனைக்குரியது. சட்டம், நீதி, நிர்வாகம் என்பவற்றை அடுத்து ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகங்கள் விளங்குகிறது. அமெரிக்க என்று மட்டுமல்ல உலகம் பூராகவும் ஊடகங்களின் செல்வாக்கு வியாபித்துள்ளது. மக்கள் அன்றாட வாழ்வில் இடம்பெறும் தகவல்களினை மாத்திரமல்லாது, எவ்வளவு தூரம் ஊடகங்கள் குறித்த செய்திக்கு முக்கியத்துவம் வழங்குகிறது என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும். எந்த செய்திக்கு முதன்மை அளிக்கின்றன என்பதில் இருந்து ஊடகங்களின் நிகழ்ச்சி நிரலினை கண்டுகொள்ள முடியும்.
     இணையத்தின் வருகையில் இருந்து ஊடகங்கள் முதன்மை அளிக்கின்ற தன்மைகள் மாற்றம் அடைந்துள்ளது. இதனையே பிரஜைகள் ஊடகவியல் எனும் எண்னக்கருவானது குறிப்பிடுகிறது. இன்றைய ஊடகங்கள் முற்றிலும் மாறுபட்டது. சாதாரண மக்கள் கூட இன்று உலகலாவிய ரீதியாக பூகோள தடங்கல்களினை கடந்து தமது எண்ணங்கள் கருத்துக்களை பரிமாற்றம் செய்ய முடிகிறது. மக்களிற்கு விழிப்புணர்வு ஊட்டுவதாக ஊடகங்கள் காணப்படுகிறது.
      மேலும், சமூக ஊடகங்கள் இன்று விவாதத்திற்கு மிகவும் பரந்த வெளியை உருவாக்கியுள்ளது. அண்மையில் மகாவலி திட்டத்திற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் வெடுக்குநாறி வழிபாட்டுக்கு ஏற்படுத்தப்பட்டு இருந்த தடைக்கு எதிரான மக்கள் கருத்துக்கள் சமூக ஊடகங்களே பிரதானப்படுத்தியிருந்தன. இதேவேளை, எகிப்தில் இணையதளத்தளங்களினை முடக்குவதற்கு புதிய சட்டத்தை அந்நாட்டு ஜனாதிபதி அப்தல் பத்தாம் அல் சிசி விதித்து இருந்தார். இது ஏற்கனவே 600 இனையத்தளங்கள்  எகிப்தில் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
     இன்றைய நிலையில், சமூக ஊடகங்களினை இலகுவாக கையாளக் கூடிய நிலை இருந்தாலும் ஊடகங்களின் நெறிமுறை சார்ந்த எல்லை வரம்புகளை அறிந்து அவற்றின் எதிர்மறையான தாக்கத்தில் இருந்து விடுபட்டு ஊடகங்கள் நம்மை பெறுமதியுடையதாக்கவேண்டும்.
இ.தனஞ்சயன்

சனி, 18 ஆகஸ்ட், 2018

ஊடகங்களின் எல்லையை விரிவடையச் செய்யும் உலகமயமாக்கல்!

இன்றைய சமுகத்தை கட்டுமானம் செய்வதில் ஊடகங்களின் பங்கு அளப்பரியது. ஒவ்வொரு மனிதனின் நாளாந்த வாழ்கையின் முக்கிய பகுதியாக ஊடகங்கள் காணப்படுகிறது. ஒரு விடயம் பற்றிய கருத்துகளினை உருவாக்கும் பங்கினை ஊடகங்கள் வழங்கும் தகவல்கள் அடிப்படையாகக் கொண்டே காணப்படுகிறது. அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் முக்கியமான தொடர்பாடல் கருவியாக ஊடகங்கள் விளங்குகிறது. ஊடகங்களின் பிரதான பணியாகக் காணப்படுவது உலகிற்கு எந்த ஒரு தகவலினதும் சரியான விடயம் எது? பிழையான விடயம் எது? என்பதேயாகும். சரியான நேரத்தில் சரியான விடயத்தை சரியான முறையில் கொண்டு சேர்கும் பாரிய பொறுப்பு ஊடகத்திற்குண்டு. ஊடகங்கள் எங்களைச் சுற்றிய அனைத்தையும் முன்னிலைப்படுத்துகின்றது. உதாரணமாக, இணையம், தொலைக்காட்சி, வானொலி,சஞ்சிகை மற்றும் பத்திரிகை போன்றவற்றை குறிப்பிடலாம். குறித்த ஊடகங்கள் வாயிலாக வரும் தகவல்கள்/செய்திகள் அடிமட்ட மக்களினை சென்றடையும் போதே ஊடகங்கள் வெற்றி அடைகின்றன. சமுக பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் தொடர்பில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்கள் தொடர்புகொண்டுள்ளனர். இவ்வாறான விடயங்களை ஊடகங்கள் வாயிலாகவே வெளிக்கொணரமுடியும். இதன்காரணமாக, மக்கள் ஊடகங்களில் தங்கியுள்ளனர். ஊடகங்கள் மக்களில் தங்கியுள்ளது. தற்போதைய நிலையில், ஊடகங்களினை மக்கள் தவிர்க்க முடியாது. மக்களிற்கு தகவல்களினை வழங்கி அவர்களிற்கு பல்வேறு செய்திகள், நிகழ்வுகள், சமூக நடவடிக்கைகள், வாழ்க்கை முறைமை, பொழுது போக்கு மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றை தெளிவுபடுத்துவதாக ஊடகங்கள் காணப்படுகிறது. இலங்கையில் இருந்துகொண்டே, உலகின் எப்பகுதியானாலும் கனடாவோ,ஜேர்மனியோ , தென் கொரியாவோ, அவுஸ்திரேலியாவோ நடைபெறும் நிகழ்வுகளை நேரடியாக கண்டு கொள்ள முடிகிறது. அண்மையில் ரஷ்யாவில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியினை உதாரணமாக குறிப்பிடமுடியும். ஊடகங்கள் சமுகம் மற்றும் அவற்றின் கலாச்சாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனினும் உலகமயமாக்கலின் விளைவினால், ஊடகங்கள் பாரிய செல்வாக்கினை பெற்றுள்ளதுடன் மக்களிற்கு பல சாதக பாதக விடயங்களும் காணப்படுகிறது. பல்வேறு வகையான சமூகங்களின் ககலாச்சாரங்களை ஊடகங்கள் வேறு சமூகத்திற்கு சொல்லி கொடுக்க வழிஏற்படுகின்றது. உதாரணமாக, வட இந்திய நாடகங்கள் தமிழிற்கு டப்பிங் செய்தல் மற்றும் தென் இந்திய திரைப்படங்களின் அதீத தாக்கத்தை இலங்கை தமிழ் சமூகத்தை குறிப்பிடலாம். இதன்காரணமாக, ஊடகங்களினை மக்கள் சாட்சியாக பார்கின்றனர். ஊடகங்களே உலக நிகழ்வுகள் தொடர்பாக அறிவூட்டலை வழங்குகிறது. இத்தகைய ஊடகங்கள் அரசியலில் முக்கிய பிரச்சார ஊடக கருவியாகப் பயன்படுத்துகின்றது. நாட்டின் தலைவர்களினை மக்கள் தெரிவுசெய்வதற்கு மக்களினை குறித்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான காரணங்களினை நியாயப்படுத்தும் கருவியாக ஊடகங்களே காணப்படுகிறது. ஊடகங்களினை பொறுத்தவரை சாதக பாதக அம்சங்கள் காணப்பட்டாலும் மக்களின் சுபாவம் மற்றும் மனநிலையிலேயே அதன் சாதக பாதகங்களை தீர்மானிக்க முடியும். ஊடகங்களின் தாக்கத்தை சரியான முறையில் புரிந்து கொள்ளும் போது, அதனை எமக்கு சாதகமான முறையில் சூழலினை உருவாக்க முடியும். ஊடகங்களின் செல்வாக்கு காரணமாக, தனிநபர்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளில் மாற்றங்களை உண்டாக்க முடியும். உலகமயமாக்கல் காரணமாக, இன்று எமது சாதாரண கருத்துக்கள் கூட இலகுவாக உலகின் எந்த பாகத்தில் இருந்தாலும் எடுத்துச் செல்லப்படுகின்றது.
ஆக்கம்: இ.தனஞ்சயன்


சனி, 11 ஆகஸ்ட், 2018

அரசாங்கத்திற்கும் மக்களிற்குமான உறவுப்பாலமாக விளங்குவது ஊடகங்களே!

             மக்களின் வரியில் செயற்படும் அரச ஊடகங்கள் மற்றவர் மீது சேறு பூசும் விதத்தில் செயற்பட முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அபே கம வளாகத்தில் இன்று (09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
சுயாதீனத் தொலைக்காட்சி, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் என்பன அரச நிறுவனங்கள் ஆகும். இது நடுநிலையாக செயற்பட வேண்டும். ஆனால், அரசாங்கத்துக்கு வால் பிடித்து, மற்றவர்கள் மீது பொய்யான செய்திகளை ஒளிபரப்பி வருவதை அனுமதிக்க முடியாது.
தனியார் ஊடகமொன்றில் யாராவது ஒருவர் மற்றொருவர் மீது சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபடுவதாயின், அதனை எதிர்க்க முடியாது. ஆனால், நாட்டின் வரிப் பணத்தில் இயங்கும் ஒரு ஊடகம் இவ்வாறு செயற்பட முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். குறித்த செய்தியானது இணையதளத்தில் வெளியாகியிருந்தது. இந்த செய்தியின் பின்புலம் தொடர்பாக ஆராய்வதாகவே இந்த பத்தி எழுத்து அமையவிருக்கின்றது.
      ஊடகங்கள் என்பது தகவல்கள் மற்றும் கருத்துகளை பரிமாற்றம் செய்கின்ற சாதனங்களே ஆகும். ஜனநாயகத்தை நிலைநாட்டும் முக்கிய காரணியாக ஊடகங்கள் விளங்குகிறது. எனினும், ஊடகங்கள் பெரும்பாலும் அடக்குமுறையை எதிர்கொள்வதாகவே காணப்படுகிறது. எமது நாட்டை பொறுத்தவரை பாரிய யுத்தமொன்றை எதிர்கொண்ட காரணத்தால் ஊடக சுதந்திரம் பற்றி வாயே திறக்காத சூழ்நிலையே காணப்பட்டது. இதேவேளை யுத்த சூழலில் ஊடகவியலாளர்கள் பலர் கொல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். சில ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு தப்பியோடினர். இவ்வாறான ஊடகவியலாளர்களில் பலர் தமிழர்கள்  என்பது கவனிக்கத்தக்கது. மேலும் லசந்த விக்கிரமதுங்க மற்றும் பிரகீத் எக்னெலி கொட போன்றவர்களிற்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக கேள்வி எழுப்பும் செய்தி ஊடகங்களே காணப்படுகிறதே அன்றி தமிழ் ஊடகவியலாளர் பற்றி ஊடகங்கள் அலட்டிக் கொள்வதில்லை. குறிப்பாக இத்தகைய ஊடகவியலாளர்களிற்கான அச்சுறுத்தல் நிறைந்த காலப்பகுதியாக மகிந்த ராஜபக்சவின் காலமே இருந்தது. நல்லாட்சி அரசாங்கம் என்று கூறப்படுகின்ற அரசாங்கத்தின் காலப்பகுதியில் முன்னைய அரசாங்கத்தோடு ஒப்பிடுகையில் பாரிய ஊடக சுதந்திரத்திற்கான களமுன்டு எனலாம். பொதுவாக அரச ஊடகங்கள்  நடப்பு அரசாங்கத்தின் பிரச்சாரபீரங்கிகளாகவே காணப்படும். காரணம், குறித்த அரச நிறுவனங்களின் தலைவர் குறிப்பிட்ட அரசாங்கத்தினால் நியமிக்கப்படுவார். எனவே, அரச ஊடகங்களினை கட்டுபடுத்தும் அதிகாரம் முழுமையாக அவரிடம் ஒப்படைக்கப்படும். முன்னாள் ஜனாதிபதி குறித்த விடயத்தை அறியாதவர் அல்ல. கடந்த தனது ஆட்சியில் அரச ஊடகங்களினை மிகவும் தனக்கு உடன்பாடுமிக்கதாக பயன்படுத்தியவர்களில் முன்னோடியானவர். போரை வெற்றி பெற்றுக்கொடுத்தவர் மற்றும் சரத்பொன்சேகாவினை ஹிட்லருக்கு ஒப்பிட்டமை போன்றன சில உதாரணங்கள் மேலும் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சுயாதீன தொலைக்காட்சியினை பிரச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டு மஹிந்த ராஜபக்ஷ மீது காணப்படுகிறது. எது எப்படியோ குறித்த கருத்து அரசியல் நோக்கத்தில் வெளியிட்டகருத்தாகவே உட்பொருள் கொள்ள முடிகிறது.
          
           இதேவேளை, அன்மையில் உலக நாடுகள் இடையே ஊடக சுதந்திரம் பற்றி ஆய்வு மேற்கொண்ட எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்ட 180 நாடுகளை உள்ளடக்கிய அட்டவணையில் இலங்கை பத்து இடங்கள் முன்னேற்றமடைந்து 131 இடத்தை பிடித்துள்ளது. இதற்கான முக்கிய காரணமாக தகவல் அறியும் உரிமை சட்டதை அமுல்படுத்தியமையைக் கூறலாம். மேற்கண்ட அட்டவணையில் நோர்வே முதலிடத்தையும் சுவீடன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. தாய்லாந்து 42 வது இடத்திலும் தெற்காசிய நாடான பூட்டான் 84வது இடத்திலும் பட்டியல் படுத்தப்பட்ட அதேவேளை வடகொரியா இறுதி இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. நாட்டின் காவல் நாய்களாக விளங்கும் ஊடகங்கள் எது மக்களிற்கு சரி எது நடுநிலையானது என்பதை அறிந்து வெளியிட வேண்டும். ஒரு சிறந்த அறிவுத்தெளிவு மிக்க சமூகத்தை உருவாக்கும் அதிகாரம் ஊடகங்களிற்கே உண்டு. எனினும் குறித்த ஊடகங்கள் சில அரசியல் சுயலாபங்களிற்காக ஒருபக்க நியாயப்பாடுகளை முன்வைப்பது கவலையான விடயமாகும். அரசாங்கத்திற்கும் மக்களிற்குமான உறவுப்பாலமாக விளங்கும் ஊடகங்கள் நேர்மைத்தன்மையுடன் செயற்படும் போதே ஜனநாயகம் தொடர்பாக சற்றேனும் உரையாட முடியும்.

ஆக்கம்:
இ.தனஞ்சயன்

சனி, 4 ஆகஸ்ட், 2018

அரசியல் ஆடுகளத்திலும் வெற்றி பெற்ற இம்ரான் கான்!

அண்மைக்காலங்களில் விளையாட்டு உலகில் பரபரப்பான சம்பவங்கள் இடம்பெற்றன. உலகக்கிண்ண கால்பந்து போட்டி,இலங்கை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி,இந்திய இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி என போட்டிகள் நடைபெறும் அதேசமயம் போட்டிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய விடயங்களும் இடம்பிடித்து ஊடகங்களுக்கு நல்ல விருந்தாக அமையும். அதிலும் குறிப்பாக இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர், திலங்க சுமதி பால அர்ஜுன ரணதுங்க மற்றும் அரவிந்த டீ சில்வா மீது சூதாட்டத்தில் தொடர்பு பட்டதாக குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்ததும் அதனைத் காலாவதியான குற்றச்சாட்டுகளுக்கு ஊடகங்களுக்கு பதிலளித்து இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரான முதல் பேட்டியில் தோற்றதற்கு திலங்க சுமதி பாலா தம்புள்ள மைதானத்திற்கு விஜயம் செய்தமை சந்தேகப்படவைக்கின்றது என முன்னாள் வீரர்கள் கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, இலங்கையில் விளையாட்டுத்துறை அரசியலில் மூழ்கி பரிதாபமாக காணப்படும் நிலையில் விரைவில் கிரிக்கெட் சபை தேர்தலினை நடாத்தும் படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் கவனிக்க வேண்டியது. இதேவேளை, 2020 ஜனாதிபதி தேர்தலில் இலங்கை அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த சங்ககார குறித்த ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளராக களமிறங்குவார் எனவும் அவர் அரசியலில் ஈடுபட வரவேண்டும் என ராஜித சேனாரத்ன அண்மையில் குறிப்பிட்டு இருந்தமை கவனிக்க வேண்டியது. இந்த நிலையில், எமது அயல் நாட்டின் பரம எதிரியான நாடான பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் மற்றும் 1992 உலகக்கிண்ணத்தை பாகிஸ்தானிற்கு பெற்று கெடுத்த அணித்தலைவர் இம்ரான் கான் பாகிஸ்தானிய பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று கூட்டணியின் ஆதரவுடன் பிரதமராகின்றார்.65 வயதான இம்ரான் கான் 1996 ஆம் ஆண்டு அரசியலிற்கு நுழைந்தாலும் அரசியலில் 22 வருடங்களாக போராடியே தனது பிரதான இலக்கை (Main Goal) அடைகின்றார். இவருடைய பிரதான கொள்கையாக பாகிஸ்தானில் சமாதானத்தை ஏற்படுத்தல் மற்றும் ஊழல் மோசடிகளை இல்லாது ஒழித்தல் போன்றன காணப்பட்டாலும் பிரதமராக பதவியேற்ற பின்னர், குறித்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் பாரிய சவால்கள் காணப்படும் என்பது மறுப்பதற்கில்லை. பாகிஸ்தானில் இராணுவத்திடம் அதிகாரம் காணப்படுகின்ற நிலையில் பாகிஸ்தான் இராணுவத்தின் செல்லப்பிள்ளையாகவே இருக்க வேண்டிய நிலை இருக்கும். அத்துடன் இம்ரான் கானின் வெற்றிக்கு பின்னால் இராணுவத்தின் உழைப்புள்ளது என்று சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். இதேவேளை, பூகோள அரசியல்ரீதியில் பாகிஸ்தான் அமைவிடம் இந்திய, சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் அரசியலிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பிட்ட நாடுகளுடன் எவ்வாறான அரசியல் இராஜதந்திர தொடர்புகளை கையாழப்போகின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறான சூழலில்,"இந்தியா ஒரு அடி எடுத்தால் நான் இரண்டு அடி எடுப்பேன்" என்று கூறியுள்ளார். இதேவேளை, தான் பதவியேற்கவுள்ள ஆவணி மாதம் 15 ம் திகதி நடைபெறும் நிகழ்வில் இந்திய பிரதமர் மற்றும் தன்னுடைய காலத்தில் இந்திய அணியில் விளையாடிய கபில்தேவ் மற்றும் சுனில் கவாஸ்கருக்கும் அழைப்பு விடுக்க இருக்கின்றமை மேற் சொன்ன கருத்தை உயிரோட்டமிக்க தாக்குகின்றன. சர்வதேச அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் அமெரிக்காவுடன் முரண்பட்ட கருத்துக்களினை கொண்டுள்ள இம்ரான் எப்படி பாகிஸ்தானினை மாற்றி அமைத்து கொள்வதுடன் சர்வதேச அளவில் வருகின்ற சவால்களை வெற்றி கொள்ள போகின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதேநேரம், குறித்த வெற்றி தொடர்பாக, இம்ரான் கானின் முதல் மனைவி Ms Gold smith குறிப்பிடும் போது 22 வருட தியாகம்,தடைகளை வெற்றி கொள்ளுதல் மற்றும் நிராகரிப்புக்களை தாண்டி பாகிஸ்தானின் புதிய பிரதமரான எனது மகன்களின் தந்தைக்கு வாழ்துக்கள் என்று கூறினார்."22 years later, After humiliation, hurdles and sacrifice, My son's father is Pakistan's new prime minister". நிட்சயமாக, கிரிக்கெட் ஆடுகளத்தில் எதிர்கொண்ட சவால்களை விட பாரிய அளவில் சவாலுக்கு முகம்கொடுக்க நேரிடும். எது எப்படியோ, எமது நாட்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், அரசியலிற்கு வந்து பாராளுமன்றம் சென்ற வீரர்களை காணமுடியும். ஆயினும், இம்ரான் தனது போராட்ட குணம் மற்றும் இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கி நகர்ந்து வெற்றி பெற்ற விதத்தில் இருந்து ஓர் முன்மாதிரியாக விளங்குகின்றார். ஆக்கம்: இ.தனஞ்சயன் (யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகத்துறை முன்னாள் மாணவன் மற்றும் இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்ச்சி பிரிவின் உதவி தயாரிப்பாளர்)

ஞாயிறு, 27 மே, 2018

ஊடகங்களினை விளங்கிக் கொள்ளுதல் காலத்தின் கட்டாயமாகும்!

       சமூகத்தில் பரந்த மற்றும் பலதரப்பட்ட பங்கினை வகிக்கும் ஊடகங்கள் பற்றிய அறிவுத்தெளிவு இல்லாதன் காரணமாக நாம் பல்வேறு வகையான தகவற்தெளிவு சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது . தற்போதைய நிலையில் இன,மத குரோத சிந்தனையை தூண்டும் வகையில் ஊடகங்கள் தமது விற்பனையை பெருக்கி கொள்ள மஞ்சள்இதழியல் பண்புகளை உள்வாங்கிக்கொண்டே கொண்டே தமது ஊடக வியாபாரத்தை செய்கிறது.
       ஊடகங்களில் வரும் தகவல்கள்   உண்மையானது என்ற முற்கற்பிதம் பார்வையாளர்கள் மத்தியில் காணப்படுவதால் பல்வேறு வகையான சிக்கல்களை சமூக மட்டத்தில் தோற்றுவிற்கின்றன. ஊடகங்கள் என்பது தகவல்கள் மற்றும் கருத்துகளை பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படும் ஓர் உபாயம் ஊடகங்கள் எனலாம். ஆங்கிலத்தில் "The Media is an important source of information through its news segments, entertainment and allows for exchange of ideas, suggestions and comments ".நவீன உலகில் சராசரியாக ஒன்பது மணித்தியாலங்களினை ஒருவன் தனது தொலைபேசியில் செலவு செய்கின்றான் என அமெரிக்காவில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
         நமது நாளாந்த வாழ்வில் அதிகமான நேரத்தை தொலைபேசியில் செலவு செய்யும் நாம் அவற்றின் வெளியாகும் தகவல்களின் உண்மைத்தன்மையை விளங்கிக் கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. குறிப்பாக இணைய ஊடகங்களில் பெரும்பாலும் இத்தகைய பிரச்சினையை அவதானிக்க முடிகின்றது. ஊடகங்களின் செல்வாக்கு(Media influence ) தற்காலத்தில் மிகவும் இன்றியமையாதாகி விட்டது.
     பெரும்பாலானவர்கள் தற்போதைய காலகட்டத்தில்  சமூக  ஊடகங்களில் தங்கியிருப்பதன் காரணமாக, அனைத்து செய்திகளையும் உண்மை என்று நம்புகிறார்கள். இந்த உண்மைத்தன்மையை சவாலுக்கு உட்படுத்தும் விடயம் ஒன்றாகவே ஊடக எழுத்தறிவு காணப்படுகிறது. தற்போதைய நிலையில்,தகவல் பரிமாற்றத்தில் வேகம் மற்றும் விரைவு காரணமாக நம்பகத்தன்மை குறித்து அதிகம் சிந்தனை செய்ய வேண்டிய அவசியம் தோண்றியுள்ளது.
      எம் கண் முன்னே உலகின் உண்மை விடயங்களை படம்பிடித்து காட்டுவது ஊடகங்களாகும். தற்போதைய காலகட்டத்தில் எந்த ஒரு ஊடகங்களும்   இல்லாத நிலையினை கற்பனை பண்ணி பாருங்கள். எங்களால் வட கொரியா,தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா,ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து வருகின்ற தகவல்களின் பெற்றுக் கொள்ள முடியுமா? இன்று நாம் அனைத்து தகவல்களையும் வரலாறு, புவியியல், மதம்,தொழில்நுட்பம் போன்றவற்றை Google.com மில் தேடி தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். இன்றைய உலகமயமாக்கல் சூழலில் ஊடகங்களின் செல்வாக்கு பரந்து காணப்படுவதால்,எமது நாளாந்த வாழ்விலும் அதேசமயம் மக்களின் சிந்தனையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய ஊடகங்கள் மக்களின் வாழ்வியலில் சாதக பாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை மிக்கது. இத்தகைய ஊடகங்களை சாதகமான விடயங்களிற்கு பயன்படுத்தும் போது, ஆரோக்கியமான விளைவுகளை எதிர்பார்க்க முடியும். ஊடகங்கள் செல்வாக்கு மற்றும் அதிகாரம் வாய்ந்தது. ஊடகங்களில் கேட்கும் பார்கும் செய்திகளை மக்கள் நம்புகின்றனர். இதனையே ஊடக விமர்சகர், Marshall Macluhan "Media is the message "என்கிறார். அதாவது ஊடகம் என்பது செய்தியே ஆகும்.
     21ம்நூற்றாண்டில்ஊடகத்துறையின் தாக்கம் காரணமாக ஊடக எழுத்தறிவு கல்வியுடன் நெருக்கமானதொன்றாக பார்கப்படுகின்றதது. As pen media literacy leadership institute "The ability to access, analyze, evaluate and create media in a variety of forms "என வரைவிலக்கனப்படுத்தப்படுகின்றது. அதாவது தமிழில் கூறினால் ஓர் தகவலை வெவ்வேறு பட்ட வடிவில் மதிப்பிட்டு,ஒழுங்கு படுத்தி அணுகும் ஆற்றலே ஊடக எழுத்தறிவு என்று வரைவிலக்கனப்படுத்தப்படுகின்றது. சமூகத்தில் ஊடகத்தின் பங்கினை புரிந்து கொள்ளும் ஆற்றல் ஊடக எழுத்தறிவு என்று மேலும் ஒரு வரைவிலக்கனம் காணப்படுகிறது.
     21 ம் நூற்றாண்டில் ஊடகத்துறை தனித்துறையாக வளர்சியினை உலகளாவியரீதியில் எட்டிய போதும் எமது இலங்கை தமிழ்பேசும் மக்கள் மத்தியில் ஊடகத்துறை இன்றும்கூட தமக்குரிய துறையாக  பெரும்பாலானவர்களால் கருத்தில்கொள்ளாதமை குறித்து அதிகம் சிந்திக்க வேண்டியுள்ளது.

ஆக்கம்
இ.தனஞ்சயன்.

சனி, 3 மார்ச், 2018

வாழ்வை வடிவமைப்பன ஊடகங்களே!

தற்காலத்தில் நமது வாழ்க்கையினை வடிவமைக்கும் ஒன்றாக ஊடகங்கள் விளங்குகிறது.இவ் ஊடகங்கள்(Media)சமுதாயத்தை பலப்படுத்துவதாக அமைய வேண்டும்.ஊடகங்கள் சமுகங்களில் பல்வேறு வழிகளில் செல்வாக்கு செலுத்துகிறது. எதேனும் ஒரு தகவலை கருத்தை பலரறியச் செய்வதற்கு மிகப்பெரிய அபாரமாக ஊடகங்களே காணப்படுகிறது. காலத்தின் கண்ணாடியாகக் தற்போது ஊடகங்களே திகழ்கிறது.
       ஊடகங்கள் கருத்துக்கள், யோசனைகள், திட்டங்களை பரிமாறிக் கொள்வதற்கான தகவல் பரிமாற்ற கருவியாக ஊடகங்கள் விளங்குகிறது.இதனை ஆங்கிலத்தில் "The media is an important source of information by its news segments, entertainment and allows for exchange of ideas, suggestion and comments "இந்த ஊடகங்களினை பல்வேறு வழிகளில் வகைப்படுத்தினாலும் பிரதானமாக மூன்று வகைகளில் அதாவது; Broadcast media, Print media and Web media என்று வகைப்படுத்துவார்கள்.
        தற்போதைய காலத்தில் இனையங்களின் வரவு தகவலை பல்வேறு வடிவங்களில் பெற்றுக் கொள்ள வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.தனி நபர்கள் தமக்கென தனியான ஊடகங்களினை பேனக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.மேலும், 20ம் நூற்றாண்டில் மனித குலத்துக்கு கிடைத்த வரப்பிரசாதமாக இனையத்தைக் கொள்ளலாம்.
    மனிதனுக்குள்ள தகவல் பசியை(Information hunger) போக்கும் வண்ணம் இனைய ஊடகங்களின் வரவு அமைந்துள்ளது.குறித்த ஊடகங்களில் வரும் தகவல்களை மக்கள் அப்படியே நம்புகின்றனர்.ஊடகங்கள் நடுநிலையானவை என்ற முற்கற்பித எண்ணங்கள் மக்களிடம் உண்டு. எனினும், ஊடகங்கள் அதிகார மட்டத்திற்கு உட்பட்டு தம்மை தவறாக பிரதிநிதித்துவம்(Misrepresentation)செய்யக்கூடியவை.உதாரணமாக,தற்போது சிரியாவில் இடம்பெறும் யுத்தம் கூட அமெரிக்க தன் நலன் சார்ந்த விஷயங்களை உள்ளடக்கியே செய்திகள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுகிறது.இதேபோன்றே,2003 ம் ஆண்டில் ஈராக் மீதான தனது அராஜகத்தை நியாயப்படுத்தியது.அமெரிக்காவின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாக ஊடகங்களினை தனக்குள் வைத்துக் கொள்ளும் ஆற்றலை குறிப்பிடலாம்.
          இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளில் ஊடக சுதந்திரம்என்பது மட்டுப்படுத்தப்பட்டது.அரச அடக்குமுறை மற்றும் ஊடக நிறுவனத்தில் உள்ளே காணப்படும் சு தந்திரமற்ற ஊடகங்களின் நடுநிலையான தன்மையினை சவாலுக்குட்படுத்தியுள்ளது.ஊடகங்கள் தனித்து செய்தியை வழங்குதல் மாத்திரமல்லாது மகிழ்சிபடுத்தல்,விழிப்புணர்வைஏற்படுத்தவும் வேண்டும்.
       உள்ளூர், சர்வதேச, வணிக மற்றும் விளையாட்டு செய்திகள் நாளந்த மனித வாழ்வில் அடிப்படை தேவைகளுள் ஒன்றாகி விட்டது.இவ்வாறான ஊடகங்கள் தனது உள்ளடக்கங்களில் உண்மை,நடுநிலை,பக்கம்சாராமை போன்ற ஊடக விழுமியங்களினை பேனும்போதே நல்ல முன்மாதிரியான சமுதாயத்தை உருவாக்க முடியும்.

ஆக்கம்: இ.தனஞ்சயன்(இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினிகூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்சிப்பிரிவில் உதவித்தயாரிப்பாளர்)

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

சிந்தனையை எளிமைப்படுத்துவதே மொழியாகும்!

"Language is the closest fitting dress of thought "சிந்தனையின் மிக நெருக்கமான ஆடையே மொழி ஆகும்.அதேபோன்று, Ahmed Deedat என்பவர் "Language is the key to the heart of people "மொழிபெயர்ப்பு மக்களின் இதயவாசலின் திறவுகோல் என்பது மொழி என்று கூறுகிறார்.இதேவேளை,பிற மொழிகளை கற்றல் தொடர்பாக Ray leobond குறிப்பிடும் போது,"A different language is a different vision of life " அதாவது, வேறுபட்ட மொழியினை கற்பது வேறுபட்ட சிந்தனை மனப்பான்மையை விருத்தி செய்துகொள்ள உதவும் என்று கூறுகிறார். அதேபோல், Haruki Murakami "Learning another language is like becoming another person "அதாவது இன்னுமோர் மொழியினை கற்றுக் கொள்வது இன்னும் ஒரு மனிதன் என்ற நிலைக்கு சமமானது என்று கூறுகிறார்.
    அத்துடன், மொழி என்பது சிந்தனையில் செல்வாக்கு செலுத்துகிறது. மொழியினை கற்பது என்பது செவிமடுத்தல் வாயிலாக இலகுபடுத்தப்படும்.ஒரு மொழி அறிவின் எல்லையே உலகத்தின் எல்லையாக கருதிக்கொள்ள முடியும்.எமது நாட்டில் மூன்று தசாப்த காலமாக இனப்பிரச்சினை தீர்கப்படாமல் காணப்படுவதற்கு மொழியே இடைவெளியை உண்டுபன்னியமையும் மறுக்க முடியாத உண்மை.அந்த வகையில் நாம் தமிழ் மொழியில் மாத்திரம் புலமை பெற்றால் போதாது பல மொழியறிவு அவசியமானது.
      அந்தவகையில்,ஏனைய மொழியொன்றினை கற்றுக்கொள்வதில் பலர் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர் குறித்த இடர்பாடுகளை எவ்வாறு வெற்றி கொள்ளலாம் அதற்கான தீர்வுகளை பரிந்துரை செய்வதாகவே  குறித்த பதிவு அமைய இருக்கிறது.
மொழியானது நமது சூழலில் நாம் கிரகிக்கின்ற சொற்களினை நாம் பேசுகின்றோம் அதுவே பின்னர் மொழியாகின்றது.குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பிறந்த குழந்தை அமெரிக்காவில் வசிக்கும் போது தானாகவே ஆங்கில மொழியை கற்றுக்கொள்ளும்.
நாம் எந்த மொழியை கற்றுக் கொள்ள விரும்புகின்றோமோ அந்த மொழியை நன்றாக செவிமடுக்க வேண்டும்.மொழியொன்றினை கற்றுக் கொள்ளும் போது ஊக்கம்/ஆர்வம் பிரதானமானது.ஆர்வம் இல்லாமல் எந்த விடயத்தையும் பூரணமாக செய்ய முடியாது.மொழியினை கற்றுக் கொள்வதற்கான/உரையாடுவதற்கான சூழலை உருவாக்குதல்.மொழியினை கற்றுக் கொள்வதற்கு என நேரத்தை ஒதுக்குதல்.எமது தாய் மொழியில் உள்ளவற்றை நேரடியான மொழிபெயர்ப்பு சிந்தனைக்கு உட்படுத்தாமல் குறித்த மொழியின் தனித்துவமான தன்மைகளை சிந்தித்தல்.தனித்தனியாக சொற்களை மனணம் செய்யாமல் சொற்தொடர்களினை வாசித்தல்.காட்சி வடிவில் எமக்கு தேவையான மொழியில்(in target language) கற்பனை செய்தல். எமது சொல் வளங்களை(vocabulary)அதிகரித்துக்கொள்ளுதல்.எங்களிடையே பழமொழி ஒன்று உள்ளது. பானையில் இருந்தால் தான் அகப்பையில் வரும்.
        அதேபோன்று, சொல்வளமாக காணப்படும்போதே எம்மால் தன்ணம்பிக்கையுடன் பேச முடியும்.தினமும் புதிய சொற்தொடர்களை அறிந்து கொள்வதுடன் அவற்றை மறந்துவிடாமல் குறிப்பு புத்தகத்தில் குறித்து வைக்க வேண்டும்.நாங்கள் கற்றுக் கொள்ள விரும்புகின்ற மொழி சார்ந்த சுவாரசியமான videos களை பார்க்க வேண்டும்.மொழிகளைக் கற்றுக் கொள்ளும் போது எந்த விதமான கூச்சமோ எதிர்மறையான சிந்தனைகளுக்கோ இடம் கொடுக்கக் கூடாது.ஒரு குழந்தை போல கற்றுக் கொள்ள வேண்டும். அச்சு ஊடகங்களான பத்திரிகை மற்றும் சஞ்சிகை போன்றவற்றை வாசிக்க வேண்டும்.குறிப்பாக,பத்திரிகையில் ஆசிரியர் தலையங்கம், பத்திஎழுத்து,வாசகர் பகுதி போன்றவற்றை வாசிக்க வேண்டும். மேலும் எந்த ஒரு மொழியினை எடுத்துக் கொண்டாலும்  காலம் முக்கியமாக திகழ்கிறது. காலங்களினை கற்றுக் கொள்ளும் போது முதலில் கடந்த காலத்தினையும், பின்னர் நிகழ்காலத்தினையும் பின்னர் எதிர்காலத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும்.குறித்த மொழியின் அடிப்படை இலக்கணத்தை கற்றுக் கொள்ளுதல்.எமது நாளாந்த வாழ்க்கையை நாம் கற்றுக் கொள்ள விரும்பும் மொழியில் சிந்தித்தல் மற்றும் தினப்பதிவேட்டினை பயன்படுத்த்தல்.தவறுகளை கண்டு அஞ்சாமல் குறித்த தவறு களில் இருந்து கற்றுக் கொண்டு கம்பை வளப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் நகைச்சுவை துனுக்கு புத்தகங்கள் மற்றும் இலக்கன புத்தகங்களினை வாங்கி வாசித்துக் கொள்ளும் போது மொழியில் இலகுவாக புலமை பெற்றுவிடலாம்.
       உலகத்தில் உள்ள எந்த மொழியையும் விடாமுயற்சியுடன் கூடிய அறிதலார்வம் இருந்தால் இலகுவான முறையில் கற்றுக் கொள்ள முடியும். மொழி என்பது சிந்தனைக்கு முதன்மையானது அல்ல சிந்தனையை எளிமைப்படுத்துகின்றது.மேற்கண்ட நுட்பங்களை பயன்படுத்தும் போது உலகில் உள்ள எந்த மொழியையும் கற்றுக் கொள்ள முடியும்.
நம்பிக்கையுடன்,
இ.தனஞ்சயன்
ஊடகத்துறை
யாழ்பாணப்பல்கலைக்கழகம்
இலங்கை தேசிய தொலைக்காட்சி ரூபவாகிஹினி கூட்டுத்தாபனம்.