அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

வெள்ளி, 8 மே, 2020

கொரோனாத் தேர்தல் தந்திர சூத்திரம் வகுக்கப்படுமா?

       
        உலகலாவிய ரீதியாக அச்சுறுத்தல் விளைவிக்கும்  கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி உலக நாடுகள் வல்லரசு நாடான அமெரிக்கா உட்பட திணறி வருகின்றன. இந்த  வைரசை ஒழிக்க இதுவரை பூரணமாக  தடுக்கக்கூடிய  மருந்துகள் எதுவும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

எனினும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமால் நாடு முழுவதும் முடக்க நிலையில்  இருப்பது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலம் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்ற நிலை உள்ளது. எனவேதான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டில் தேசிய அளவில் ஊரடங்கை நடைமுறை படுத்தி வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தி வருகின்றன. நியூசிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பாகிஸ்தான் போன்ற நாடுகள் முடக்க நிலையில் சில தளர்வுகளை ஏற்படுத்தி உள்ளன.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஒலிம்பிக் போட்டி உட்பட உலகின் பல முக்கிய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பிய நாடான போலந்தில் நடைபெற இருந்த அதிபர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. போலந்தில் தற்போது வரை 15,365 ற்கும்  மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 760 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.


      எனினும் அதிபர் ஆண்ட்ரேஜ் துடா தலைமையிலான அரசு வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனிடையே கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் போலந்தில் வருகிற 10ம் திகதி அதிபர் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் அதிபர் ஆண்ட்ரேஜ் துடா மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு மக்களிடம் பெரும் ஆதரவு இருப்பதால் மீண்டும் அவர் அதிபராக ஆகுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில், கொரோனாவால் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்துவது பொருத்தமாக இருக்காது என்றும், எனவே தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமெனவும் கோரிக்கைகள் எழுந்தன.

அதுமட்டும் இன்றி ஊரடங்கால் வேட்பாளர்கள் பிரசாரத்தை நிறுத்தியுள்ளதால் வாக்குப்பதிவு வெளிப்படையாகவும், நியாயமானதாகவும் இருக்காது என்றும் சர்வதேச அரசியல் விவகார  நோக்கர்கள் கவலை தெரிவித்தனர். ஆனால் ஆளும் தேசியவாத சட்டம் மற்றும் நீதி கட்சி, தேர்தலை நடத்தி ஆண்ட்ரேஜ் துடாவை மீண்டும் அதிபராக்குவதில் மும்முரம் காட்டியது.

அதே சமயம் சுகாதார நெருக்கடியை பயன்படுத்தி ஆளும் கட்சி அரசியல் ஆதாயம் தேட வாய்ப்பு இருப்பதாகவும், எனவே தேர்தலை ஒத்திவைக்கவேண்டுமெனவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் வந்த அழுத்தத்தை தொடர்ந்து, அதிபர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அந்த நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. எனினும் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பதை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. கூடிய விரைவில் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என்றும், தபால் மூலம் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா பீதிக்கு மத்தியில் கடந்த மாதம் தென்கொரியா மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடான மாலி ஆகிய  நாடுகளில்  தேர்தல்கள் வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டுள்ளமை கவனிக்கதக்கது. இதேவேளை, இஸ்ரேலில் 4 வது முறையாக தேர்தலுக்கு செல்லாமல் மக்கள் எதிர்பை மீறியும்  கூட்டரசாங்கம் சுழற்சி முறை பிரதமர் முறைமையின் அடிப்படையில்  (Rotative Prime minister ) அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் இம் மாதம் முடக்க நிலை எதிர்வரும் 11 ம் திகதியுடன் முடிவுக்கு வரும் என்கிற தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்ற இந்த சூழலில் அடுத்த மாதம் 20 ம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தில், இலங்கை போலாந்தின் வழியை பின்பற்றுமா? தென்கொரியா அனுபவத்தை பயன்படுத்துமா? புதிய தந்திர சூத்திரம் வகுக்கப்படுமா?  என்பதை சில கால பொறுமையின் பின்னரேஅறிந்து கொள்ள முடியும். அன்மைய நாட்களின் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானாவர்களின் எண்ணிக்கை தலைநகரில்  அதிகரித்தமை  தேர்தலை பிற்போடுவதற்கு ஒரு காரணியாக அமையலாம்.







ஞாயிறு, 3 மே, 2020

ஊடக சுதந்திரம், மக்களிற்கு உரியதே அன்றி ஊடக நிறுவனங்களுக்கு சொந்தமானதல்ல!


    உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் மனித உரிமைகள் சாசனம் பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் சபையினால்  சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆப்பிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே "பத்திரிகை சுதந்திர சாசனம்" (Declaration of Windhoek) முன்வைக்கப்பட்டது.

இது 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினால் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட ,'உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கானதும், ஊடகச் சுதந்திரத்தினதும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆணை' என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.

    அந்த வகையில், 2020 ம் ஆண்டிற்கான தொனிப்பொருளாக "Journalism without fear and favour " அதாவது, 'பயமற்ற மற்றும் பக்கச்சார்பற்ற இதழியல்' அமைந்துள்ளது. சுயாதீனமான ஊடகத் துறையினை பாதுகாப்பதன் வாயிலாகவே நாட்டின் ஜனநாயக பண்புகள் சிறந்த முறையில் இயங்குவதை உறுதி செய்ய முடியும்.

உலக பத்திரிகை சுதந்திரம் என்பது நம்பத்தகுந்த, பெறுமதி மிக்க, தகவல்களினை மக்களிற்கு வழங்குவதற்காக அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுக்கும் தினமாக அமைந்துள்ளது. இன்று உலகலாவிய ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பரவல் காலப் பகுதியிலும் ஊடகவியலாளர்கள் மனம்தளராது தமது சுய தேவைகளை ஒறுத்தும் மக்களிற்கு சரியான தகவல்களை கொண்டு சேர்க்க பாடுபடுகின்றனர்.

       கொரோனா துன்பியல் காலப்பகுதியில் ஊடக பணியாளர்கள் சுயாதீனமாகவும், நடுநிலைமயானதாகவும், ஆதார பூர்வமானதாகவும் இருக்க வேண்டும். ஊக அடிப்படையில் செய்திகளை வெளியிட்டு மக்களினை திசை திருப்ப கூடாது. சுதந்திரமான ஊடகங்களானது இக் காலகட்டத்தில் அவசியமாகும். சுதந்திரமான ஊடகமானது மக்களிற்கு உரிய காலத்தில் பொருத்தமான தகவல்களினை வழங்கி அறிவூட்டுவதாக அமைய வேண்டும். இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக, போலியான செய்திகள் வெளியிட்டமை தொடர்பாக  300 ற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பத்திரிகை சுதந்திரம் தொடர்பாக , கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ரோனியோ குத்தரஸ் " சுதந்திரம், துல்லியம், தெளிவு மற்றும் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்குவதன் மூலம் தவறான தகவல்களை பரப்பும் கலாச்சாரத்தை இல்லாதொழிக்க முடியும். ஊடக அறங்களிற்கு முரணாக செயற்படும் தன்மை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கங்கள், ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதரவினை எதிர்பார்பதாக குறிப்பிட்டார். அத்துடன், கொவிட் 19 பரவல் காலத்தில் ஊடகவியலாளர்கள் சுயாதீனத் தன்மையுடன் செயற்பட வேண்டும் என்று கூறினார். தற்போது உலகலாவிய ரீதியாக 250 ஊடகவியலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் அன்ரோனியோ குத்தரஸ் கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இந்நிலையில், எல்லையற்ற   ஊடகவியலாளர்கள் அமைப்பினால் 180 நாடுகள் மத்தியில் ஊடகங்களிற்கு அளிக்கப்படுகின்ற சுதந்திரம் தொடர்பான சுட்டெண்பட்டியலில் வடகொரியா இறுதி இடத்தை பிடித்துள்ளது. சீனா 177 வது இடத்தையும், ஈராக் 162 வது இடத்தில் உள்ளன. தென் ஆசிய நாடுகளில் இலங்கை 127 வது இடத்தையும், இந்தியா 142 வது இடத்தையும் பங்களா தேஸ் 151 வது இடத்தையும் பிடித்துள்ளன. நோர்வே, பின்லாந்து, டென்மார்க் முறையே முதலாம் ,இரண்டாம், மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன.

சுதந்திரமான ஊடகமானது சரியானதாகவும் தவறானதாகவும் அமையலாம் மாறாக சுதந்திரமற்ற ஊடகம் தவறானதாகவே அமைய முடியும்.  எனவே, வழங்கப்படும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தாமல் சரியான ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்குவதே ஊடகங்களின் தலையாய பொறுப்பாகும். ஊடக சுதந்திரம் என்பது மக்களிற்கு உரியதே அன்றி ஊடக நிறுவனங்களுக்கு சொந்த மானதல்ல.

இ.தனஞ்சயன்