அறிவைநாடல்

அறிவைநாடல்
அறிதலார்வம்

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

சர்வதேச கரிசணை பெற்றுள்ள மியன்மார் அரசியல்!

 மீண்டுமொரு வலைப்பூ பதிவில் சந்திப்பதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.இந்த பதிவு மியன்மாரின் தற்போதய நிலைமை தொடர்பாக ஆராய்கின்றது.

தென்கிழக்காசிய நாடான மியன்மாரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத் தேர்தல் இடம்பெற்றது. இதில் அந்நாட்டின் அரச ஆலோசகர் ஆங் சாங் சூ கி தலைமையிலான ஆளுங்கட்சி அமோக வெற்றி பெற்றது. மியன்மாரில் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைவியான ஆங் சாங் சூ கி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதை அடுத்து மியன்மாரின் பதற்ற நிலைமை தோன்றியுள்ளதோடு, ஜனநாயக ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

இவ் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு திரட்டும் முகமாக பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருகின்றன. இதனையடுத்து மியன்மார் இராணுவம் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களைத் தடை செய்துள்ளது. மியன்மாரில் 53 மில்லியன் சனத்தொகையில் அரைப்பங்கினர் பேஸ்புக் பாவனையாளர்களாக உள்ளனர். இந்நிலையில் மியன்மாரின் தகவல் தொடர்பாடல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களிலிருந்து வரும் தவறான புரிதலை கட்டுப்படுத்துமுகமாக சமூக வலைத்தள தடைகளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மேற்கொண்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், விபிஎன் போன்ற செயலிகளைப் பயன்படுத்தி பேஸ்புக் பாவனையில் மியன்மார் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மியன்மாரில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவன இயக்குனர் கருத்து வெளியிடுகையில், மக்களுக்கு வேறு தெரிவு இல்லை எனத்; தெரிவித்துள்ளார். 

பேஸ்புக் நிறுவனத்தின் பேச்சாளரான அன்ரி ஸ்ரோன் மியன்மாரில் நெருங்கிய உறவினர்களுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையில் சில தளர்வுகளை பேஸ்புக் ஊடாக செய்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சாங் சூ கி மீது தவறான முறையில் தொடர்பாடல் கருவிகளை இறக்குமதி செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை பொலிசார்  ஆங் சாங் சூ கியின் வதிவிடத்தில் கண்டெடுத்ததாகக் குறிப்பிடுகின்றனர். இதேவேளை, ஆசியான் பாராளுமன்றத்தில் மனித உரிமை பிரிவினர் பொருத்தமில்லாத குற்றச்சாட்டு என கூறுகின்றனர். இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஜனநாயகத்திற்கான தேசிய கட்சியும் உத்தியோகபூர்வ அறிக்கையை ஆங் சாங் சூ கி மியன்மாரின் தலைநகரில் வீட்டுக் காவலில் உள்ளதாகவும் எனினும் அவரது உடல் நிலையில் எந்தப் பாதிப்பு இல்லை எனவும் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இராணுவம் ஆங் சாங் சூ கியின் வீட்டுக் காவல் தொடர்பில் எந்தவொரு கருத்தும் வெளியிடவில்லை. மியன்மார் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள இராணுவம் ஜனநாயகத்திற்கான தேசிய கட்சி நவம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தலில் பெற்ற வெற்றியானது முறைகேடான முறையில் பெற்றது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்தும் முன்வைத்து வருவதுடன் ஒரு வருட காலத்திற்கு தேசிய அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. 

இதனையடுத்து மியன்மார் விவகாரம் சர்வதேச அளவில் பாரிய பேசும் பொருளாகவும் மாறியுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் பிரித்தானியாவிற்கான நிரந்தர பிரதிநிதியான பார்பரா வுட்வாட்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மியன்மாரில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பாக தாம் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாக மியன்மாரின் இறைமை, அரசியல் சுதந்திரம், பிராந்திய பாதுகாப்பு மற்றும் மியன்மாரின் ஐக்கியம் போன்றவை மீள உறுதி செய்வதுடன் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைவியான ஆங் சாங் சூ கி மற்றும் ஆளுங்கட்சியின் முக்கியத் தலைவர்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். 

இதேவேளை அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் கருத்து வெளியிடும் போது மியன்மாரில் ஆட்சியை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் ஆட்சியை மீள கையளிக்கவேண்டும் எனவும் வீட்டுக்காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், முடக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்கள் மீள அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



திங்கள், 1 பிப்ரவரி, 2021

மியன்மாரில் மீண்டும் இராணுவ ஆட்சி!

மீண்டும் ஒரு பதிவில் உங்களை குறுகிய கால இடைவெளியில்  சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். குறித்த வலைப்பூ  பதிவானது மியன்மாரில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பாக சிந்திப்பதாகேவ அமைய இருக்கின்றது. 

மியன்மாரில் சில நாட்களுக்கு முன்னதாக ஜனநாயக வழிமுறையில் தேர்தல் இடம்பெற்றது. அந்தத் தேர்தலில் ஆங் சாங் சூகியின் மக்களாட்சிக்கான தேசிய கட்சி அமோக வெற்றி பெற்றது. 


குறித்த தேர்தல் வெற்றியை இராணுவம் மோசடியான முறையில் பெற்ற வெற்றியாக கூறியது. இந்நிலையில் ஆங் சாங் சூகி மற்றும் ஆளுங்கட்சியின் முக்கியத் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இராணுவத்திற்கு சொந்தமான தொலைக்காட்சியில் நாடு பூராகவும் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஏராளமான படையினர் மியன்மாரின் முக்கிய நகரமான யங்கோனில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. தொலைபேசி இணைப்புக்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.


 இதேவேளை  மியன்மாரில் அரச தொலைக்காட்சியான எம்.ஆர்.டிவி ஒளிபரப்புச் சேவை இடம்பெறவில்லை. அதன் சமூக வலைத்தளத்தில் தொழில்நுட்ப தடங்கல் காரணமாக ஒளிபரப்பமுடியவில்லை என்ற பதிவு காணப்படுகிறது. 

இதேவேளை ஆளுங்கட்சியின் சட்டவாக்குனர் தானும் வீட்டுக் காவலில் வைக்கப்படலாம் என செய்தி வெளியிட்டுள்ளார்.


இதேவேளை இராணுவப் பேச்சாளருக்கு பல தடவைகள் அந்நாட்டு ஊடகங்கள் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டதோடு அதற்கு பதிலளிக்கவில்லை. கடந்த நவம்பரில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஆங் சாங் சூகி மக்களாட்சிக்கான தேசிய கட்சி பாரிய வெற்றியை பெற்றது. 


குறித்த வெற்றியானது மோசடி மூலம் பெறப்பட்டது என இராணுவம் குற்றம் சாட்டியிருந்தது. ,ந்தக் குற்றச்சாட்டை மியன்மாரில் தேர்தல் ஆணையகம் மறுத்தது. 2015ம் ஆண்டு இடம்பெற்ற மியன்மார் பாரிய வெற்றியை பெற்றுக் கொண்டார். ஆங் சாங் சூகி 1990ம் ஆண்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். 1991ம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசினை பெற்றுக் கொண்டார். 2010ம் ஆண்டு வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். எனினும் மியன்மாரில் ரோஹின்யா முஸ்லிம்கள் மீது ஆங் சாங் சூகியின் கட்சி இருந்த காலப்பகுதியில் மேற்கொண்ட அடக்கு முறைகள் காரணமாக ஆங் சாங் சூகிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டமை தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   


1962ஆம் ஆண்டு மியன்மாரில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் அது இராணுவத்தின் நேரடி ஆட்சியின் கீழ் செயல்பட்டுவந்தது. அதனால் இராணுவம் தன்னை நாட்டின் பாதுகாவலராகக் கருதுகிறது.


2008ஆம் ஆண்டு மியன்மாரின் அரசமைப்புச் சட்டம், ராணுவத்தால் வரையப்பட்டது. அதை அடுத்து, மியன்மார் அரசியலில் இராணுவம் நிரந்தர இடம் வகிக்கிறது.

எந்தத் தேர்தலிலும் போட்டியிடாமல் நாடாளுமன்றத்தின் 25 வீதமானவை  இராணுவத்துக்குச் செல்லும்.

இராணுவத் தலைவர் தற்காப்பு, உள்துறை, எல்லைப் பாதுகாப்புத் துறை அமைச்சர்களை நியமிப்பார்.
இதனால் ஆளுங்கட்சியுடன் இராணுவம் எப்போதும் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு அரசமைப்பை மியன்மார் கொண்டிருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இ.தனஞ்சயன்