அறிவைநாடல்

அறிதலார்வம்
வியாழன், 2 மே, 2019
"வாள்முனையினை விடவும் பேனா முனையே வலிமையானது"
உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் விஸ்தரிக்கும் நோக்கில் "மனித உரிமைகள் சாசனம்" பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் சபையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் 1993 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வொரு வருடமும் மே 3 ஆம் திகதி பத்திரிகை சுதந்திரதினமாக கொண்டாடப்பட்டுவருகின்றது. "குல்லர்மோ கானோ இசாசா " என்ற கொலம்பிய நாட்டு பத்திரிகையாளரின் பெயரால் வழங்கப்படுகிறது. "எல் எஸ்பெக்டேட்டர்' என்ற பத்திரிகையில் பணிபுரிந்த இவர், போதை பொருள் மாபியா கும்பலுக்கு எதிராக தொடர்ந்து எழுதியதால், பத்திரிகை அலுவலகத்தின் முன்பாகவே, 1986ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது சேவையை மற்றும் துணிச்சலினை பாராட்டியே, விருதுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும், உலகம் முழுவதும் இருந்து பத்திரிகையாளர்களை அழைத்து, பத்திரிகை சுதந்திரம் எதிர்நோக்கி உள்ள பிரச்னைகள், அவற்றை தீர்க்கும் வழிமுறைகள் போன்றவற்றை "யுனெஸ்கோ" ஆராய்கின்றது.
ஆபிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே 'பத்திரிகை சுதந்திர சாசனம்' முன்வைக்கப்பட்டது. இது 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் நடாத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட , 'உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கானதும், ஊடக சுதந்திரத்தினதும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆனை' என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.
ஜனநாயகத்தின் நான்கு பிரதான தூண்கள் என்று சொல்லப்படுபவற்றில் நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, ஊடகங்கள் என நான்காவது இடத்தில் ஊடகங்கள் இருக்கின்ற போதிலும், அதற்கு மேலுள்ள தூண்களும் சரியாகச் செயற்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து, மக்களுக்கு அறிவிக்கும் முக்கியமான பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு.
ஊடகங்கள் என்று வரும்பொழுது வழக்கமான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள் போன்ற ஊடங்களைத் தாண்டி இணைய செய்தித் தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் பகிரப்படும் தகவல்களும் ஊடகங்கள் என்ற வகைக்குள்ளேயே அடங்குகின்றன.
பத்திரிகைச் சுதந்திரம் உள்ள உலக நாடுகளின் தரப்படுத்தல் வரிசையில் இலங்கைக்கு 126 ஆம் இடம் கிடைக்கப்பெற்றுள்ளது. ஊடக சுதந்திரம் உச்ச அளவில் உள்ள நாடாக நோர்வே தெரிவாகியுள்ளது. இஸ்ரே 88 ஆவது இடத்திலும், கனடா 18 ஆவது இடத்திலும், ஜேர்மனி 13 வது இடத்திலும் உள்ளது. அமெரிக்கா 48 ஆவது இடத்தில் உள்ளது. சீனாவுக்கு 177 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. கடைசி இடமான 180 ஆவது இடத்துக்கு துர்க்மெனிஸ்தான் தெரிவாகியுள்ளது.
ஊடகங்களுக்கு ஓரளவு சுதந்திரத்தை வழங்கக் கூடியதாக கருதப்படும் இன்றைய இலங்கை அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்பாக இலங்கையில் நிலைமை 165வது இடத்தில் காணப்பட்டது. எனவே, இந்த முன்னேற்றமென்பது முக்கியமானது என்ற போதிலும் 2015ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டில் 24 இடங்கள் முன்னேறி 141ஆவது இடத்திலிந்த இலங்கை, 2016 இலிருந்து 2017 இற்கு எந்தவித முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தவில்லை. எனினும் 2018; இல் 131 ஆவது இடத்தினை பெற்ற அதேவேளை 2019 இல் 5 இடங்கள் முன்னேற்றம் கண்டு 126 ஆவது இடத்தை பெற்றுள்ளது.
உலகின் பல நாடுகளிலே சமூக உறுதிப்பாட்டையும் விட ஊடக சுதந்திரம் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. ஊடகங்களின் பணி மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். எனினும், கடந்த ஒருவருடத்தில், உலகளாவிய ரீதியில் ஆப்கானிஸ்தானில் 15, சிரியாவில் 11, மெக்ஸிகோவில் 9, ஜேமனில் 8, இந்தியாவில் 8, அமெரிக்காவில் 6 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சீனாவில் 60 , எகிப்தில் 38 , துருக்கியில் 33, சவூதி மற்றும் ஈரானில் 28 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் உள்ள 180 நாடுகளில் நிலவும் ஊடக சுதந்திரநிலைமைக்கு அமைய மேற்கொண்ட ஆய்வுகளுக்கு அமைய, நாடுகளின் ஊடக சுதந்திர சுட்டெண் பட்டியல் வெள்ளை, மஞ்சள், செம்மஞ்சள் , சிவப்பு, கருப்பு என்ற 5 பிரிவுகளில் உள்ளடக்கப்படுகின்றன.
சிறந்த ஊடக சுதந்திரம் உள்ள நாடுகள் வெள்ளை நிற வலையத்திற்கு உள்ளவாக்கப்படுகின்து. இதில் 8% மான நாடுகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊடக சுதந்திரம் ஓரளவுக்கு சிறப்பாகவுள்ள நாடுகள் மஞ்சள் நிற வலயத்திற்குள் உள்ளவாக்கப்படுகின்து. இம்முறை இந்த பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட 16% மான நாடுகள் இந்த வலையத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
செம்மஞ்சள் நிறத்திற்குட்பட்ட வலையத்தில் இடம் பெற்ற நாடுகளில் ஊடக சுதந்திரம் தொடர்பான பிரச்சனை நிலவுகின்றதாகும். இதில் ஜப்பான், பிறேசில், இஸ்ரேல், பூட்டான், நேபாளம் உள்ளிட்ட 37% மான நாடுகள் இடம் பெற்றுள்ளன.
சிவப்பு வலையத்திற்குட்பட்ட நாடுகள் என்பது ஊடக சுதந்திரம் மிக சிறப்பாக இல்லை என்பதாகும். ரஷ்யா, இந்தியா, மாலைத்தீவு உள்ளிட்ட 29% மான நாடுகள் இடம் பெற்றுள்ளன.
ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக காணப்படும் நாடுகள் கறுப்பு வலையத்திற்குட்பட்டதாகும். ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக காணப்படும் நாடுகளில் வடகொரியா மற்றும் துர்க்மெனிஸ்தான் போன்ற 11% மான நாடுகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுதந்திரமாக கருத்துகளை வெளிப்படுத்துவதற்கும் சுதந்திரமாகப் பத்திரிகைகளை வெளியிடுவதற்கும் செய்திகளைச் சதந்திரமாக மக்களை சென்றடைவதற்கும் உலகிற்கு வாய்க்கப் பெற்ற ஒரு உரிமையைப் பாதுகாப்பதற்காகத் தங்களது உயிர்களைத் தியாகம்; செய்தவர்களையும் நினைவு கூறும் தருணமாக இன்றைய தினம் அமைகிறது.
இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ "குல்லர்மோ கானோ இசாசா உலக பத்திரிகை சுதந்திர விருது" வழங்கிக் கௌரவிக்கின்றனர். இவ்விருது கொலம்பியப் பத்திரிகையாளர் "குல்லர்மோ கானோ இசாசா" என்பவரின் நினைவாக வழங்கப்பட்டு வருகிறது. இவர் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17 இல் அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் கொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
உலக அமைதிக்காகவும், பேச்சுச் சுதந்திரத்திற்காகவும் மற்றும் பத்திரிக்கை தர்மத்தினூடாக பல இன்னல்களைத் தாண்டிப் போராடிய பத்திரிகையாளர் ஒருவருக்கு இந்நாளில் 25,000 டொலர் பெறுமதியான பரிசு வழங்கப்படுகின்றது. சுமார் 14 நபர்களைக் கொண்ட குழுவால் குறிப்பிட்ட இத்தெரிவு நடைபெறுகிறது.
"வாள்முனையினை விடவும் பேனா முனையே வலிமையானது"(Pen is more mightier than sword) என்பது ஊடகவியலாளர்களின் பேனாவின் வலிமையை எடுத்து காட்டுமொரு பொன்மொழியாகும். செய்தி அறிக்கையிடலில் ஊடக தர்மத்தை (Media ethics) பேனுவது மிகவும் அவசியமானது. இதேவேளை, தேவையற்ற அழுத்தங்களுக்கு அடிபணிந்தோ, சுய லாப நோக்கிலோ செயற்படாமல் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் பொது மக்களின் நலன்களை உறுதி செய்யும் வகையில் செயற்பட வேண்டும்.

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019
ஜனநாயகவெளியை அகலப்படுத்தும் ஊடகங்கள்!
ஜனநாயகத்தின் அடிநாதமாக அமைவது சுயாதீனமான ஊடகத் துறையே ஆகும். ஊடகங்களின் குரல் மக்களின் குரலிற்கு சமமானது. ஊடகங்களில் மேற்
கொள்ளும் தணிக்கை என்பது மக்களின் குரலிற்கான தணிக்கையாகவே அமைகிறது. கடந்த சில நாட்களில் ஊடகங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகியது. எமது நாட்டில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவம் அனைத்து சர்வதேச ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாகியது.
இந்நிலையில், உலக அளவில் டுவிட்டரில் அதிக பின்தொடர்பவர்களை (Followers) வைத்திருக்கும் தலைவர்களில் முக்கியமானவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். ஆனால் சமீபகாலமாக ருவிட்டரில் தன்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாகவும், ருவிட்டர் நிறுவனம் தனக்கு எதிராக செயல்படுவதே இதற்கு காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டி வந்தார்.
மேலும், ருவிட்டர் நிறுவனம் பழமைவாதிகளுக்கு எதிரான போக்கை கையாண்டு வருவதாகவும், தனது ருவிட்டர் பக்கத்தில் இருந்து ஏராளமானவர்களை நீக்கியதோடு, தனது ஆதரவாளர்கள் டுவிட்டரில் இணைவதற்கான வழிமுறைகளை கடினமாக்கிவிட்டதாகவும் டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் டிரம்பின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ருவிட்டர் நிறுவனம் மறுத்து வந்தது.
இந்த நிலையில், ருவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சேவை, வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து டிரம்ப் சந்தித்து பேசினார். அப்போது டிரம்ப், ருவிட்டரில் தன்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ருவிட்டரின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அடுத்த ஆண்டு நடைபெற போகின்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ருவிட்டரின் பங்களிப்பு இருக்க போவது தெளிவாகின்ற அதேவேளை, டிரம்பின் ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு ருவிட்டரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. டிரம்ப் தனது தொடர்பாடலிற்காக ருவிட்டரிலே அதிகம் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், ஜனநாயக கட்சி சார்பில் பைடன் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்தியாவில் டிக் டொக் செயலிக்கு தடை விதிப்பது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றமே முடிவு செய்யும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டிக் டொக் செயலிக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு மத்திய அரசு தடை விதிக்குமாறு உத்தரவிட்டது. இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டிக் டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்துவிட்டது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, எதிர்மனு தாரரிடம் விளக்கம் கேட்கப்படவில்லை எனவும், எனவே, டிக் டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனவும் கோரி, உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள், எதிர்மனுதாரரின் விளக்கத்தையும் பெற்று, அதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என கூறினர். சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க தவறினால், டிக் டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, எமது நாட்டில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வர மறுபரிசீலனை செய்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதுடன் பொய்யான செய்திகள் பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லையென்றால் சமூக வலைத்தளங்களை முழுமையாக தடை செய்து விடுவேன் எனவும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களின் பிரதானிகள் மற்றும் ஊடக ஆசிரியர்களை சந்தித்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
கடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நாட்டின் பாதுகாப்பிற்காக பேஸ்புக்,ருவிட்டர், வட்ஸ்அப் ,வைபர் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களின் பாவனை தடைசெய்யப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சமூக வலைதளங்களினை தற்காலிகமாக தடைசெய்ததன் காரணமாக, பொருளாதார ரீதியில் நாடு இழப்பினை சந்தித்தமை கவனிக்கதக்கது.
தற்போதைய காலகட்டத்தில் பெரியவர்கள், சிறியவர்கள் என அனைத்து தரப்பையும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக்,வைபர் வட்ஸ்அப் மற்றும் யூ டியூப் போன்றவை அதிக வரவேற்பை பெற்று இருக்கின்றன.
இத்தகைய ஊடகங்களில் நாள்தோறும் மணிக்கணக்கில் நேரம் செலவிடும் இளைய தலைமுறையினர் ஏராளம். அப்படி சமூக ஊடகங்களில் அடிமையாகிப்போனவர்களுக்கு, அவற்றின் முடக்கம் தகவல்களினை பெற்றுக்கொள்ள சிரமத்தை உண்டு பண்ணியபோதும் மாற்று வழியாக VPN apps ஊடாக பலர் சமூக ஊடகங்களினை பார்வையிட்டனர் என்பது கவனிக்கத்தக்கது. இதேவேளை, சமூக ஊடகங்களில் தவறான மற்றும் தேசிய ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பதிவிடுவோருக்கு, 3 அல்லது 5 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற தகவலும் அண்மைய நாட்களில் ஊடகங்களில் வெளியானது.
இந்த நிலையில், ஜெலன்ஸ்கி உக்ரைனின் தேர்தலில் வெற்றி பெற்றார். ஜெலன்ஸ்கி, தனது 17 வயதில் உள்ளூர் தொலைக்காட்சி நடத்திய நகைச்சுவை போட்டியில் பங்கேற்றார்.
அதனை தொடர்ந்து, தொலைகாட்சி தொடர்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடக்க தொடங்கினார். அவரது தொலைக்காட்சி தொடர்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதால் பிரபல நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார். கடந்த 2003-ம் ஆண்டு, தனது பள்ளி தோழியான ஒலனா கியாஷ்கோவை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில், ஜெலன்ஸ்கி கதா நாயகனாக நடித்த ‘மக்களுக்கான வேலைக்காரன்’ (Servant of people) என்கிற தொலைக்காட்சி தொடர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாக தொடங்கியது.
கதையின் படி பள்ளிக் கூட ஆசிரியரான ஜெலன்ஸ்கி, நாட்டில் நடக்கும் ஊழலை விமர்சித்து பேசும் வீடியோ சமூகவலைத் தளங்களில் வேகமாக பரவி, அதன் மூலம் அவர் நாட்டின் அதிபர் ஆவார்.
இந்த கதைக்களம்தான் ஜெலன்ஸ்கியை அரசியலுக்கு வர தூண்டியது. ‘மக்களுக்கான வேலைக்காரன்’ தொடர் மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றதன் மூலம், உக்ரைன் மக்கள் தற்போதைய அரசின் மீது அதிருப்தியில் இருப்பதை அவர் தெரிந்துகொண்டார்.
இதையடுத்து, தனது தொலைகாட்சி தொடரின் தலைப்பையே தனது கட்சியின் பெயராக கொண்டு ‘மக்களுக்கான வேலைக்காரன்’ என்ற கட்சியை கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கினார். மற்றத்தை விரும்பும் மக்களின் மனநிலையை உணர்ந்து, அதிபர் தேர்தலில் களம் இறங்கினார்.
அதன்படியே மாற்றத்துக்காக மட்டுமே அரசியலில் துளியும் அனுபவம் இல்லாத ஜெலன்ஸ்கியை மக்கள் அதிபராக தேர்வு செய்து இருக்கிறார்கள். அவர் அடுத்த மாதம் அந்நாட்டின் அதிபராக பொறுப்பு ஏற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாக்குப்பதிவு முடிவுகளுக்கு பின்னர் மக்கள் மத்தியில் பேசிய ஜெலன்ஸ்கி, “நான் உங்களை ஒருபோதும் விட்டுவிடமாட்டேன்” என்றார். மேலும் அவர் “நான் இன்னும் அதிகாரப்பூர்வமாக அதிபராகவில்லை. ஆனால், உக்ரைனின் குடிமகனாக அனைத்து நாடுகளிடமும் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். எங்களை பாருங்கள், இங்கு எல்லாமுமே சாத்தியமானது” எனவும் கூறினார்.
இவ்வாறான கடந்த கால சம்பவங்கள் ஊடகங்களின் தாக்கம் மற்றும் அதிகாரம் போன்றவற்றை காட்டுகிறது. குறிப்பாக, சமூக ஊடகங்கள் அபரிமிதமான செல்வாக்கை உலகலாவிய ரீதியாக பெற்றுள்ளது. இதேவேளை, பேஸ்புக் நிறுவனர் சமூக ஊடகங்களில் தவறாக வழிநடத்தும் தகவல்கள் மற்றும் போலி செய்திகள் காணப்படுகிறது என்பதனை ஒத்துக்கொண்ட அதேவேளை, இந்திய தேர்தலில் பிரசாரம் தொடர்பாக தவறான செய்திகள் பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்கள் ஒவ்வொருவரின் உரிமையையும் அதிகரித்துள்ளதுடன் மக்கள் தமது உரிமைக்காக போராடமுடியும். இது உள்ளூர்,வெளியூர் என்ற எல்லைக்கு அப்பாற்பட்டதாகும். இன்று பல போராட்டங்கள் சமூக ஊடகங்கள் ஊடாகவே ஒருங்கினைக்கப்படுகின்றன. உதாரணமாக, பிரான்ஸில் நடைபெறும் மஞ்சள் அங்கி போராட்டத்தை குறிப்பிடலாம். தகவல்கள் மற்றும் விவாதங்கள் ஊடகவே தெளிவு மற்றும் தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும். இதற்காகவே ஊடகங்கள் சிறந்த தொடர்பாடல் கருவிகளான உரையாடல், கருத்து கணிப்புகள், விவாதங்கள், கருத்தாடல்கள் போன்றவற்றை மேற்கொள்கின்றன . ஊழல் மற்றும் சுரண்டல்களுக்கு எதிராக போராடுவதில் ஊடகங்களிற்கு பிரதான பங்குண்டு. ஊடகங்கள் தனித்து அறிக்கையிடுவது மாத்திரமல்லாது வெளிப்படையான நிர்வாகத்திறனை பேணுவதற்கு சிறந்த கண்காணிப்பாளராக ஊடகங்கள் இருக்க வேண்டும்.
மேலும், ஊடகங்களினை அணுகும் போது, ஊடக எழுத்தறிவு முக்கியமானமுக்கியமானது. அதாவது, தகவலை வெவ்வேறு பட்ட வடிவில் மதிப்பிட்டு,ஒழுங்கு படுத்தி அணுகும் ஆற்றலே ஊடக எழுத்தறிவு என்று வரைவிலக்கனப்படுத்தப்படுகின்றது. சமூகத்தில் ஊடகத்தின் பங்கினை புரிந்து கொள்ளும் ஆற்றல் ஊடக எழுத்தறிவு என்று மேலும் ஒரு வரைவிலக்கனம் காணப்படுகிறது. எனவே, எமது நாட்டில் எழுத்தறிவு மட்டம் உயர்ந்து காணப்படும் அதேசமயம் ஊடக எழுத்தறிவு பாரிய சரிவுத் தன்மையிலேயே காணப்படுகிறது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)